

கூட்டுறவு வங்கியில் யார் தவறு செய்தாலும், நானாக இருந்தாலும் கூட தப்பிக்க இயலாது. பாராபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
மதுரை பழங்காநத்தம் பகுதியில் ரூ.1.50 கோடி மதிப்பில் மாவட்ட கூட்டுறவு துறையின் ஒருங்கிணைந்த கூட்டுறவு அலுவலக வளாகத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ திறந்து வைத்தார்.
அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் இன்னும் ஒரு மாதத்தில் ஆன்லைனில் மாற்றப்படும். வழக்கம்போல் கூட்டுறவு வங்கி மூலம் மகளிர் குழுக்களுக்கு, சிறு வணிகர்களுக்கு கடன் கொடுத்த பட்டு வருகிறது.
தற்போது மக்கள் கூட்டுறவு வங்கிகளை நம்புகிறார்கள். மிகவும் குறைந்த வட்டி விகிதத்தில் அடகு நகை கடன்கள் வழங்கப்படுகிறது. கூட்டுறவுத்துறையில் எந்தவிதமான தவறும் நடக்கக் கூடாது. தவறு செய்தால் யாரும் தப்பிக்க முடியாது. பாராட்சமில்லாமல் யார் தவறு செய்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
சமீபத்தில் ஆவினில் நடந்த மிகப்பெரிய முறைகேடு கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நானாக இருந்தாலும் தவறு செய்தால் தப்பிக்க இயலாது. தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கூட்டுறவு வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் விதிமுறைக்கு உட்பட்டே செயல்பட்டு வருகிறது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்தை எதிர்த்து இந்தியாவிலேயே நீதிமன்றத்தை நாடிய ஒரே அரசு தமிழக அரசு மட்டும் தான்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.