Published : 24 Aug 2020 02:05 PM
Last Updated : 24 Aug 2020 02:05 PM

கோட்டையையும் மக்களையும் காப்பாற்ற வேண்டிய மாபெரும் கடமை நமக்கு இருக்கிறது; ஸ்டாலின் பேச்சு

காணொலிக் காட்சி மூலம் சிலையைத் திறந்து வைக்கும் ஸ்டாலின்.

சென்னை

கோட்டையையும் மக்களையும் காப்பாற்ற வேண்டிய மாபெரும் கடமை நமக்கு இருக்கிறது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக.24), நீலகிரி மாவட்ட திமுக சார்பில், மாவட்ட அலுவலகமான உதகை - கலைஞர் அறிவாலய வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள கருணாநிதியின் திருவுருவச் சிலையைக் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்துச் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:

"நீலகிரி மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில், அண்ணாவின் சிலைக்கு அருகில், கருணாநிதியின் சிலையைத் திறந்து வைப்பதில் அளவில்லாத மகிழ்ச்சி அடைகிறேன்.

அங்கே வந்து திறந்து வைக்கக்கூடிய சூழ்நிலை இல்லாமல் இருக்கிறதே என்ற வருத்தம் ஒரு பக்கம் இருந்தாலும்; கருணாநிதியின் சிலையைத் திறந்து வைப்பது எனக்குக் கிடைத்த மாபெரும் பெருமையாக உள்ளது!

வங்கக் கடலோரம் அண்ணாவுக்கு அருகில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் கருணாநிதிக்கு, கடல் மட்டத்தில் இருந்து 7,374 அடி உயரமுள்ள உதகையில் சிலை அமைக்கப்படுகிறது.

கடற்கரையில் துயில் கொண்டிருப்பவருக்கு; மலையரசியின் மடியில் சிலை அமைக்கப்படுகிறது.

இது கருணாநிதிக்கு மட்டும் கிடைத்த பெருமை அல்ல; நமக்கெல்லாம் சேர்த்துக் கிடைத்த பெருமை!

அவர் திருக்குவளை என்ற சிற்றூரில் பிறந்தவராக இருந்தாலும்; இந்த தாய்த்திருநாட்டின் குழந்தை அவர்.

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என வாழ்ந்தவர் அவர்.

சொந்த ஊரைத் தாண்டி மாவட்டம் தாண்டி மாநிலம் தாண்டி நாடு தாண்டி உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி. அதனால்தான் அவரது சிலைகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் வைக்கப்பட்டு வருகின்றன. இன்று நீலகிரி மாவட்டத்தில் திறந்து வைக்கிறேன்.

1988-ம் ஆண்டு நிதியளிப்புக் கூட்டத்திற்காக ஊட்டி வந்திருந்தார் தலைவர் கருணாநிதி. அன்று மாலை 3 மணிக்குக் கூட்டம் நடக்க வேண்டும். தலைவர் மேடையை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மேடை சரிந்துவிட்டதாகத் தலைவருக்குத் தகவல் கிடைத்தது.

'தற்காலிகமாக ஒரு மேடையை அமையுங்கள், நான் அதில் பேசுகிறேன்' என்று அன்றைய மாவட்டச் செயலாளர் முபாரக்கிடம் தலைவர் சொன்னார். ஆனால், உடனடியாக மேடை போட முடியவில்லை. அப்போதும் தலைவர் விடவில்லை. 'திண்ணை போன்ற இடத்தை ஏற்பாடு செய்; நான் பேசுகிறேன்' எனச் சொன்னார். அதன்படி, ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் பல்லாயிரம் பேருக்கு மத்தியில் உரையாற்றினார் கருணாநிதி. இது நீலகிரி மக்கள் மீது கருணாநிதி கொண்டிருந்த பிரியத்திற்குச் சான்று!

அவர் திண்ணையில் நின்று பேசிய மாவட்டத்தில்தான் சிலையாக இன்று திறந்து வைக்கப்படுகிறார்.

உதகையைப் பிடிக்காது என்று யாரும் சொல்ல முடியாது. அந்த அளவுக்கு அனைவருக்கும் பிடித்த இடங்களில் ஒன்று உதகை!

தலைவர் கருணாநிதி முதன்முறை முதல்வராக ஆனபோது எல்லாத் துறைகளையும் வளர்த்தெடுத்தார். அதில் சுற்றுலாத் துறையும் ஒன்று. சுற்றுலாத் தலமாக இருக்கக்கூடிய உதகை மீது சிறப்புக் கவனம் செலுத்தினார்.

உதகை ஏரியைத் தூர்வாரி, மின் விளக்குகள் அமைத்து, பூங்காக்கள் அமைக்க முதல்வர் கருணாநிதி 1970-ம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்தார். அதில் இருந்துதான் உதகை ஏரி புத்துயிர் பெற்றது.

அதேபோல், உதகையில் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் மாளிகை கட்டுவதற்காகவும் நிதி ஒதுக்கீடு செய்தார். முதுமலை சரணாலயத்தை விரிவுபடுத்துவதற்காக மத்திய அரசுக்கு விரிவான திட்ட அறிக்கை கொடுத்ததும் தலைவர் கருணாநிதி ஆட்சியில்தான்.

தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது தமிழ்நாட்டில் தனியார் வசமிருந்த பேருந்துச் சேவையை முதன்முறையாக அரசுடைமை ஆக்கியது; நீலகிரி மாவட்டத்தில்தான்.

இலங்கையில் உள்நாட்டுப் போர் மூண்டபோது, ஆயிரக்கணக்கான தமிழர்கள் தமிழகம் திரும்பினர். அப்போது, அந்த மக்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்தித் தரவேண்டும் என்று நினைத்தார் முதல்வர் கருணாநிதி! இலங்கையில் இருந்து திரும்புபவர்கள் தேயிலைத் தோட்டத் தொழில் தெரிந்தவர்கள் என்பதால், 1970-ம் ஆண்டு நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர், பந்தலூர், கோத்தகிரி ஆகிய தாலுக்காக்களில் அவர்களைக் குடியமர்த்தினார். அவர்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தை தோற்றுவித்தார். அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் 43 ஆயிரத்து 111 ஹெக்டேர் பரப்பளவில் தேயிலைச் சாகுபடி செய்யும் பணியை அவர்களுக்கு வழங்கினார்.

நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் படுகர் சமுதாய மக்களுக்கு அரசு சார்பில் ஒரு கட்டிடம் கட்டித் தர வேண்டும் என நினைத்த தலைவர் கருணாநிதி. முதல் முறை முதல்வராக இருந்தபோது, உதகையில் இளம் படுகர் நலச்சங்கம் கட்டிடத்தை இலவசமாக கட்டித் தந்த பெருமை தலைவர் கருணாநிதிக்கு உண்டு.

நூறாண்டு பழமை வாய்ந்த மலை ரயில் நீலகிரியில் தொடர்வதற்குக் காரணமாக இருந்தவரும் கருணாநிதிதான். 1970-ம் ஆண்டு ஊட்டி மலை ரயில் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி, அதை முற்றாக நிறுத்திவிட அன்றைய மத்திய அரசு முடிவு செய்தது. அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, அந்த நஷ்டத்தைத் தமிழக அரசு ஏற்றுக் கொள்ளும் என்றும், ரயில் சேவையை நிறுத்த வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்தார். அதனால்தான், வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த மலை ரயில் சேவை இன்று வரை நீடிக்கிறது.

கடந்த 2005-ம் ஆண்டு, யுனெஸ்கோ அமைப்பு, ஊட்டி மலை ரயில் சேவையை உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரித்தது என்றால்; அந்தப் பெருமையும் அவருக்கே உரியது.

இப்படி இந்த மாவட்டத்துக்கு கருணாநிதி செய்த உதவிகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

1993-ம் ஆண்டு கோவையில் நடைபெற்ற மாநில மாநாட்டுக்கு ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் அந்த மாவட்டத்திற்கும் தலைவருக்கும் இருக்கும் தொடர்பை எடுத்துரைத்து வழிமொழிந்து வந்தனர். அப்போது நீலகிரி மாவட்டச் செயலாளர் முபாரக், 'நான் இயற்கை வளம் கொஞ்சும் நீலகிரியில் இருந்து வந்துள்ளேன். தலைவர் கருணாநிதி இயற்கையிலேயே தலைவர் என்பதால், இயற்கை வளம் கொழிக்கும் எனது மாவட்டம் சார்பில் வழிமொழிகிறேன்' என்றார்.

இதற்குத் தலைவர் கருணாநிதி பதிலளித்து முரசொலியில் கடிதம் எழுதி இருந்தார்.

'நான் இயற்கையிலேயே தலைவன் அல்ல; தலைவனாகப் பிறந்தவனும் அல்ல; அன்றும் இன்றும் என்றும் தொண்டன்தான்; உன் போன்ற உடன்பிறப்புகள் என்னைத் தலைவனாக்கி, தொண்டு செய்துள்ள ஆணையிட்டுள்ளீர்கள். அதுதான் உண்மை! உண்மை!!' என்று பதிலளித்திருந்தார்.

அத்தகைய தலைமைத் தொண்டராக இருந்து திமுகவை வளர்த்தவர் கருணாநிதி! தலைவராக இருந்து மாநிலத்தை வளர்த்தவர்! முதல்வராக இருந்து தமிழகத்தை வளர்த்தார்!

தாயுள்ளத்தோடு தமிழகத்தை ஆட்சி செய்தவர் தலைவர் கருணாநிதி!

ஒரு முதல்வர், தாயுள்ளத்தோடு இருக்க வேண்டும் என்று அவர் ஒருமுறை சொன்னார். 'அழுத பிள்ளை தான் பால் குடிக்கும் என்பார்கள். ஆனால், அழாத பிள்ளைக்கும் பால் தரும் பொறுப்பு தாய்க்கும் உண்டு; இந்த அரசுக்கும் உண்டு. தாய் ஆரோக்கியமாக இருந்தால் தூங்கிக் கொண்டிருக்கும் பிள்ளையையும் தட்டி எழுப்பி பால் தருவாள். அந்த அளவுக்குப் பரிவு மிக்க தாய் தான் இந்த அரசாங்கம்' என்று தனது ஆட்சிக்கான இலக்கணத்தை முதல்வர் கருணாநிதி சொன்னார்.

அப்படித்தான் அவர் ஆட்சி செலுத்தினார். அதனால்தான் அவரை இந்த உலகம் இன்னும் வாழ்த்திக் கொண்டு இருக்கிறது.

ஆனால், இன்றைக்கு ஒரு அரசாங்கம் இருக்கிறது. அழுத பிள்ளையைப் பற்றியும் கவலைப்படுவது இல்லை; அழாத பிள்ளையைப் பற்றியும் கவலைப்படவில்லை. பசியைப் போக்கும் உணவு தராமல் பட்டினி போட்டு எல்லாப் பிள்ளைகளையும் கதறி அழவைக்கும் அரசாக இது இருக்கிறது. பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டும் ஆட்சியாக இருக்கிறது. பிள்ளைகளை மட்டுமல்ல; தாய் தந்தையரையும் சித்ரவதை செய்யும் அரசாக இருக்கிறது. மொத்தத்தில் இது கரோனாவை விட கொடூர அரசாக இருக்கிறது. இரக்கமே இல்லாத அரசாக இருக்கிறது.

நீலகிரியில் மழை, வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டதும் அந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதும் நான் உடனே வந்து பார்வையிட்டேன்; ஆறுதல் சொன்னேன். திமுக சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கினோம்.

ஆனால் முதல்வர் வரவில்லை!

மக்களைச் சென்று சந்திப்பது தன்னுடைய பணியல்ல என்று நினைக்கிறார் முதல்வர். அவர் முதல்வர் ஆவதற்காக மக்கள் வாக்களிக்கவில்லை; அதனால் அவரும் மக்களை மதிப்பது இல்லை!

இருக்கும் கொஞ்ச காலத்தில் கிடைத்ததை சுருட்டிக் கொண்டு ஓட நினைக்கும் ஒரு கூட்டத்திடம் கோட்டை சிக்கிக் கொண்டுள்ளது. இவர்களிடம் இருந்து கோட்டையையும் மக்களையும் காப்பாற்ற வேண்டிய மாபெரும் கடமை நமக்கு இருக்கிறது.

'கொடியவர்களிடம் இருந்து கோட்டையை மீட்போம்;

கொள்ளையர்களிடம் இருந்து மக்களை மீட்போம்!'

- என்ற உறுதிமொழியை கருணாநிதி சிலை முன் எடுப்போம்.

மலையில் உள்ள தலைவர் கருணாநிதியின் முன் சபதம் எடுத்து கடற்கரையில் உள்ள தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் வெற்றியைச் சமர்ப்பிப்போம்".

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x