Published : 23 Aug 2020 06:29 PM
Last Updated : 23 Aug 2020 06:29 PM

ஆகஸ்ட் மாத 4-வது ஞாயிற்றுக்கிழமை: கோவில்பட்டி கோட்டத்தில் முழு அடைப்புக்கு முழு ஆதரவு

ஆகஸ்ட் மாத 4-வது ஞாயிற்றுக்கிழமையான இன்று தளர்வில்லா முழு ஊரடங்கு காரணமாக கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

கரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் மாத ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்திருந்தது.

4-வது ஞாயிற்றுக்கிழமையான இன்று கோவில்பட்டி கோட்டத்துக்கு உட்பட்ட கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், கயத்தாறு, ஓட்டப்பிடாரம், கழுகுமலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன.

கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள ஜவுளிகடைகள், பலசரக்கு கடைகள், டீக்கடைகள், ஹோட்டல்கள், பாத்திரக்கடைகள், தெற்கு பஜாரில் உள்ள நகைக்கடைகள், புத்தகக்கடைகள் என அனைத்து பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

காந்தி மைதானம், புதிய கூடுதல் பேருந்து நிலைய வளாகம் ஆகியவற்றில் செயல்படும் தற்காலிக தினசரி சந்தையில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இறைச்சிக் கடைகள் நேற்று இரவு 10 மணி வரை இயங்கின.

ஆவணி மாத வளர்பிறை முகூர்த்த நாள் என்றாலும், தளர்வில்லா ஊரடங்கு காரணமாக திருமணங்கள் சம்பந்தப்பட்ட மணமகன் வீட்டிலேயே குறைந்தளவு உறவினர்கள் முன்னிலையில் நடத்தப்பட்டது.

இதனால், சாலைகளில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வோரின் நடமாட்டம் இருந்தது.

மேலும், இன்றும் (24-ம் தேதி) வளர்பிறை முகூர்த்தம் என்பதால் நேற்றே, திருமண நிகழ்ச்சிக்கு தேவையான வாழை இலைகள், வாழைத்தார்கள், காய்கறிகள் வாங்கி மண்டபங்களில் சேகரித்தனர். அதே போல், பூட்டிய பூக்கடைகளுக்குள் வியாபாரிகள் அமர்ந்து இன்றைய திருமண முகூர்த்தத்துக்கான மாலைகளை தயார் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர்.

பூக்கள் குளிர்சாதன பெட்டியில் வைத்தாலும், காலையில் வாடும் தன்மை கொண்டது. அதனால் தான் முகூர்த்ததுக்காக கடைகளை பூட்டிவிட்டு, உள்ளே அமர்ந்து இன்று வாங்கிய பூக்களை கட்டுகிறோம், என பூக்கட்டும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x