

கோயம்பேடு ஆம்னி பேருந்து நிறுத்தத்தில் திடீரென தீப்பற்றியதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 ஆம்னி பேருந்துகள் எரிந்து நாசமாகின.
கரோனா பொது முடக்கக் காலத்தில் பொதுப் போக்குவரத்துக்குத் தொடர்ந்து தடை நீடித்துவரும் சூழலில், கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இன்று (ஆக.23) அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஆம்னி பேருந்தில் திடீரென தீப்பற்றியது. சிறிது நேரத்தில், அருகிலிருந்து ஆம்னி பேருந்துகளுக்கும் தீ பரவியது. அருகிலிருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். ஆனால், தீயணைப்புத் துறையினர் வருவதற்கு முன்பே 3 ஆம்னி பேருந்துகள் முழுவதும் எரிந்து நாசமாகின. மேலும், 2 பேருந்துகளில் பற்றியிருந்த தீயை தீயணைப்புத் துறையினர் 4 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சியடித்து அணைத்தனர்.
மேலும், தீவிபத்து நிகழ்ந்த இடத்தை பார்வையிட்ட காவல்துறையினர் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்த வீடியோ பதிவுகளை கைப்பற்றி அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தின் காரணமாக தீப்பற்றியதா அல்லது பொது முடக்கக் காலத்தில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பின்றி பேருந்துகள் நிற்பதால், வேறு யாரேனும் அதில் தீ வைத்தனரா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.