Last Updated : 23 Aug, 2020 03:01 PM

 

Published : 23 Aug 2020 03:01 PM
Last Updated : 23 Aug 2020 03:01 PM

6 மாதம் முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம்: தென்காசி மாவட்ட ஆட்சியர் தகவல்

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது டொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் கூறியுள்ளதாவது:

நோயின்றி வாழ சத்தான உணவை நாள்தோறும் எடுத்துக்கொள்ள வேண்டும். வைட்டமின் ஏ உணவில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கண் பார்வைக்கும், உள்ளுறுப்புகளின் சவ்வுப் பகுதியைக் காக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இன்றியமையாததாக அமைந்துள்ளது. பச்சை, சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு நிற உணவுகளில் வைட்டமின் ஏ மிகுந்து காணப்படுகிறது.

வளரும் பருவத்தில் உள்ள குழந்தைகளிடம் வைட்டமின் ஏ குறைபாடு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதைத் தடுக்கும் வகையில் 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்படுகிறது.

வருகிற 24-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை முதல்கட்டமாகவும், வருகிற 31-ம் தேதி முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை இரண்டாம்கட்டமாகவும், விடுபட்ட குழந்தைகளுக்கு செப்டம்பர் 5-ம் தேதி வைட்டமின் ஏ திரவம் வழங்கப்படுகிறது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் வைட்டமின் ஏ ஊட்டச்சத்து திரவம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு, தங்கள் பகுதியில் உள்ள கிராம சுகாதார செவிலியர் மற்றும் அங்கன்வாடி பணியாளரை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x