Published : 23 Aug 2020 09:16 AM
Last Updated : 23 Aug 2020 09:16 AM

கடந்த 2 ஆண்டுகளை விட நடப்பாண்டு நெல்லை மாவட்டத்தில் குறைந்த மழையளவு: அணைகளின் நீர்மட்டமும் சரிவு

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2018, 2019-ம் ஆண்டுகளில் ஆகஸ்ட் மாதத்தில் பெய்த மழையளவைவிட, இவ்வாண்டு இம்மாதத்தில் பெய்த மழையளவு மிகவும் குறைவு. இதுபோல் அணைகளின் நீர் இருப்பும் இவ்வாண்டில் சரிந்திருக்கிறது.

மாவட்டத்தில் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 1 முதல் 20-ம் தேதிக்குள் 905.70 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. 2019-ல் அதைவிட குறைவாக 524.50 மி.மீ. மழை பதிவானது. ஆனால் இவ்வாண்டு 399.80 மி.மீ. மழையே பதிவாகியிருக்கிறது. 2018, 2019, 2020-ம் ஆண்டுகளில் ஆகஸ்ட் மாதத்தில் மாவட்டத்தில் சில இடங்களில் பதிவான மழையளவு (மி.மீட்டரில்) விவரம்:

2018-ல் அம்பாசமுத்திரம்- 127.60, சேரன்மகாதேவி- 64..40, மணிமுத்தாறு- 105.60, நாங்குநேரி- 18, பாளையங்கோட்டை- 30.60, பாபநாசம்- 440, ராதாபுரம்- 98.20, திருநெல்வேலி- 21.30.

2019-ல் அம்பாசமுத்திரம்- 70, சேரன்மகாதேவி- 25, மணிமுத்தாறு- 49.80, நாங்குநேரி- 32.70, பாளையங்கோட்டை- 6, பாபநாசம்- 236, ராதாபுரம்- 102.50, திருநெல்வேலி- 2.50.

2020-ல் அம்பாசமுத்திரம்- 30.60, சேரன்மகாதேவி- 14.20, மணிமுத்தாறு- 64.20, நாங்குநேரி- 23, பாளையங்கோட்டை- 13.40, பாபநாசம்- 164, ராதாபுரம்- 78.40, திருநெல்வேலி- 12.

அணைகளில் நீர் இருப்பு

மழையளவு குறைந்துள்ள அதேநேரத்தில் அணைகளில் நீர் இருப்பும் கடந்த 2 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு குறைவாகவே இருக்கிறது. 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் கடந்த 2018-ல் இதே நாளில் 141.95 அடியாகவும், நீர் இருப்பு 98.67 சதவீதமாகவும் இருந்தது. 2019-ல் நீர் இருப்பு 64.47 சதவீதமாகவும், தற்போது 62.75 சதவீதமாகவும் உள்ளது.

156 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் 2018-ல் இதே நாளில் 146.16 அடியாகவும், நீர் இருப்பு 84.32 சதவீதமாகவும் இருந்தது. 2019-ல் நீர் இருப்பு 57.17 சதவீதமாகவும், தற்போது அதைவிட குறைவாக 46.49 சதவீதமாகவும் உள்ளது.

118 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் கடந்த 2018-ல் 84.95 அடியாகவும், நீர் இருப்பு 46.28 சதவீதமாகவும் இருந்தது. 2019-ல் நீர் இருப்பு 17.47 சதவீதமாகவும், தற்போது அதைவிட அதிகமாக 32.96 சதவீதமாகவும் உள்ளது.

வடக்கு பச்சையாறு அணையில் நீர் இருப்பு 2018-ல் 14.07 சதவீதமாகவும், 2019-ல் 0.50 சதவீதமாகவும், இப்போது 3.68 சதவீதமாகவும் உள்ளது.

நம்பியாறு அணையில் நீர் இருப்பு 2018-ல் 71 சதவீதமாகவும், 2019-ல் 9.03 சதவீதமாகவும், இப்போது அதைவிட சற்று அதிகமாக 11.06 சதவீதமாகவும் உள்ளது.

52.50 உச்ச நீர்மட்டம் கொண்ட கொடுமுடியாறு அணை கடந்த 2018, 2019-ம் ஆண்டு இதே நாளில் முழு கொள்ளளவை எட்டியிருந்தது. ஆனால், தற்போது நீர் இருப்பு 79.16 சதவீதமாக குறைந்து காணப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x