ஆயுஷ் செயலரின் இந்தித் திணிப்பு நடவடிக்கை; அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது: மத்திய அரசுக்கு கனிமொழி கடிதம்

ஆயுஷ் செயலரின் இந்தித் திணிப்பு நடவடிக்கை; அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது: மத்திய அரசுக்கு கனிமொழி கடிதம்
Updated on
1 min read

அரசியலமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவணையில், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகள் அலுவல் மொழியாக ஏற்றுக் கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டி ஆயுஷ் அமைச்சகம் அத்துமீறியுள்ளதால் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கனிமொழி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய ஆயுஷ் அமைச்சக (ஆயுர்வேதா, யோகா, இயற்கை வைத்தியம், யுனானி, சித்தா மற்றும் ஆங்கில மருத்துவம்) இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) ஸ்ரீபத் யசோ நாயக்குக்கு கனிமொழி எழுதியுள்ள கடிதம்:

“மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம், அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான வகையில், ஒரு காணொலிப் பயிற்சி வகுப்பை நடத்தியதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். இந்த நிகழ்ச்சியில், மத்திய அரசின் ஆயுஷ் துறை செயலர், இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம் என்று கூறியிருப்பது கூறி ஆங்கிலத்தைக்கூட நிராகரித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவணையில், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகள் அலுவல் மொழியாக ஏற்றுக் கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த விவகாரம் தொடர்பாக, 7 ஆகஸ்ட் 1959 அன்று பாரத பிரதமர் ஜவகர்லால் நேரு அளித்த உறுதிமொழியை உங்களுக்கு நினைவுகூர விரும்பிகிறேன். காலவரையற்று, ஆங்கிலம் தொடர்பு மொழியாக இருக்கும் என்பதையும் உங்களுக்கு நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளேன்.

மத்திய அரசு, உடனடியாக இந்த விவகாரத்தில் ஒரு விசாரணைக்கு உத்தரவிட்டு, இந்தி தெரியாத மாநிலத்தவர்களைப் பாரபட்சமாக நடத்தும் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தங்கள் அமைச்சகம் நடத்தும் நிகழ்ச்சிகளில் இந்தி தெரியாதவர்கள் இனி இதுபோல அவல நிலைக்கு ஆட்படாத வண்ணம் நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்”.

இவ்வாறு கனிமொழி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in