மத்திய அரசின் வழிகாட்டுதல்படி திரையரங்குகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும்: அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி

மத்திய அரசின் வழிகாட்டுதல்படி திரையரங்குகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும்: அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி
Updated on
1 min read

மத்திய அரசின் வழிகாட்டுதல்படி திரையரங்குகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

எட்டயபுரத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜு இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"தமிழக அரசு எடுத்த கடுமையான நடவடிக்கைகள் காரணமாக கரோனா தாக்கம் குறைந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 100க்கும் கீழே உள்ளது.

வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்ட கடலையூரைச் சேர்ந்த 34 தியாகிகளுக்கு, அந்த ஊரிலேயே நினைவுத் தூண் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் அந்த நினைவுச் சின்னத்தில் ஆக. 22-ம் தேதி அரசு சார்பில் மரியாதை செலுத்தி நிகழ்ச்சி நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழக முதல்வர் கரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க இந்த மாத இறுதியில் தூத்துக்குடி மாவட்டத்துக்கு வருகை தர உள்ளார். அந்தக் கூட்டத்தில் பல்வேறு நலத் திட்டங்களையும் பல்வேறு புதிய அறிவிப்புகளையும் வழங்க உள்ளார். அப்போது தூத்துக்குடி மாவட்ட மக்களின் கோரிக்கைகளை, முதல்வர் அறிவிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

செப்.1-ம் தேதி முதல் திரையரங்குகளைத் திறப்பதற்கு ஆலோசிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இன்னும் கரோனா வைரஸ் முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை. சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். மத்திய அரசின் வழிகாட்டுதல்படி திரையரங்குகளைத் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும்".

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in