Last Updated : 22 Aug, 2020 10:50 AM

 

Published : 22 Aug 2020 10:50 AM
Last Updated : 22 Aug 2020 10:50 AM

உலகம் முழுவதும் கரோனா நோய் விலக விநாயகர் அருள்புரிவார்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி 

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் புதுச்சேரியின் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் மிக எளிமையான முறையில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் கரோனா நோய் விலக விநாயகர் அருள் புரிவார் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் விநாயகர் சதுர்த்தி விழாவை விமரிசையாகக் கொண்டாட புதுவையிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் சிலைகள் வைத்து வழிபடுவதற்கும் ஊர்வலம் நடத்துவதற்கும் பந்தல் அமைத்து கலை நிகழ்ச்சி நடத்துவதற்கும் அரசு தடை விதித்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடி வருகின்றனர்.

புதுவையின் புகழ்மிக்க மணக்குள விநாயகர் கோயிலில் வழக்கமாக நாள் முழுவதும் வெகுவிமரிசையாக விநாயகர் சதுர்த்தி விழா நடக்கும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மணக்குள விநாயகரை வழிபடுவார்கள். ஆனால், கரோனா காரணமாக புதுவை கோயில்களிலும் புதிதாக சிலை வைக்கக் கூடாது, சிறப்பு பூஜைகள் கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் மணக்குள விநாயகர் கோயிலில் எந்த ஒரு சிறப்பு பூஜையும் நடைபெறவில்லை.

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் அலங்காரத்தில் உற்சவர்.

விநாயகருக்கு அமெரிக்கன் வைர கிரீடமும், தங்க கவசமும் அணிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நேரத்துக்கு 20 பக்தர்கள் மட்டுமே சமூக இடைவெளியுடன் சாமி கும்பிட அனுப்பப் படுகிறார்கள். பக்தர்களிடம் வெப்பப் பரிசோதனை செய்யப்பட்டு, கிருமி நாசினி கைகளில் தெளிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களுக்கு வழக்கமாக சதுர்த்தி நாளில் நாள் முழுவதும் பிரசாதம் அளிக்கப்படும். ஆனால், இன்று எந்த ஒரு பிரசாதமும் வழங்கப்படவில்லை.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் இந்த முறை எளிதில் சாமி கும்பிட முடிந்ததாகவும் மிக எளியமுறையில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுவது கவலை அளிப்பதாகவும் கரோனாவில் இருந்து உலக மக்கள் விடுபட இறைவனை வேண்டிக்கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் முதல்வர் நாராயணசாமி இன்று சாமி தரிசனம் செய்தார்.

மணக்குள விநாயகரின் உற்சவமூர்த்தி அலங்காரம் செய்யப்பட்டு உள்ள இடத்தில் வழிபாடு செய்த முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், "கரோனா நோய்ப் பரவலைத் தடுக்க மத்திய அரசு விதித்த தடையின் காரணமாக புதுச்சேரியில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கும் ஊர்வலம் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்று அனைவரும் எளிய முறையில் தற்போது விழாவைக் கொண்டாடி வருவது வரவேற்கத்தக்கது. நோய்த் தொற்றைத் தடுக்கும் விதமாக இது அமையும். சக்தி வாய்ந்த மணக்குள விநாயகர் உலகம் முழுவதும் கரோனா நோய் விலக அருள்புரிவார். மக்கள் விரைவில் சகஜ வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என இறைவனை வழிபட்டேன்" என்று குறிப்பிட்டார்.

புதுச்சேரியில் விநாயகர் சிலைகள் வைக்கப்படாமல் மக்கள் வீடுகளில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x