ஞாயிறு முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை: வானிலை ஆய்வு மையம் தகவல் 

ஞாயிறு முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை: வானிலை ஆய்வு மையம் தகவல் 
Updated on
2 min read

தமிழகத்தில் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும், ஆக.23,24,25 தேதிகளில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்:

“தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் சேலம், தர்மபுரி, நீலகிரி, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் விருதுநகர், மதுரை, கிருஷ்ணகிரி, சிவகங்கை, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், சேலம், தர்மபுரி, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 23, 24, 25 தேதிகளில் தமிழகம் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஒட்டி பதிவாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழையாக டேனிஷ்பேட்டை (சேலம்), கோத்தகிரி (நீலகிரி) ஆகிய பகுதிகளில் தலா 1 செ.மீ மழை பதிவானது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

ஆகஸ்ட் 21 அன்று வடக்கு ஆந்திரா, ஓடிசா கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஆகஸ்ட் 21 முதல் ஆகஸ்ட் 25 வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஆகஸ்ட் 22, 23 தேதிகளில் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஆகஸ்ட் 21 முதல் ஆகஸ்ட் 24 வரை மகாராஷ்டிரா மற்றும் குஜராத் கடலோர பகுதிகள் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கடல் உயர் அலை முன் அறிவிப்பு: தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை ஆகஸ்டு 22 இரவு 11-30 மணி வரை உயர் கடல் அலை 2.5 மீட்டர் முதல் 2.8 வரை எழும்பக்கூடும்”.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in