Last Updated : 21 Aug, 2020 05:30 PM

 

Published : 21 Aug 2020 05:30 PM
Last Updated : 21 Aug 2020 05:30 PM

தூத்துக்குடியில் சரக்கு ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட 15 விநாயகர் சிலைகள் பறிமுதல்: வட்டாட்சியர் அலுவலக அறையில் வைத்து 'சீல்' வைப்பு 

தூத்துக்குடியில் சரக்கு ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட 15 விநாயகர் சிலைகளை போலீஸார் பறிமுதல் செய்து வருவாய் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து அந்த சிலைகள் வட்டாட்சியர் அலுவலகத்தில் தனி அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது. வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்து முன்னணியினர் சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

விநாயகர் சதூர்த்தி விழா இன்று (ஆக.22) கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கரோனா ஊரடங்கு காரணமாக விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைக்கவும் அரசு தடை விதித்துள்ளது.

பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே விநாயகர் சதூர்த்தி விழாவை கொண்டாட வேண்டும் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு சிலர் சாத்தான்குளம் அருகேயுள்ள ஆனந்தவிளை கிராமத்தில் இருந்து ஒன்றரை அடி உயரம் கொண்ட 15 விநாயகர் சிலைகளை சரக்கு ஆட்டோவில் ஏற்றி விளாத்திகுளம் பகுதிக்கு கொண்டு சென்றனர். இந்த ஆட்டோ தூத்துக்குடி முத்தையாபுரம் சோதனை சாவடிக்கு வந்த போது இரவு 8 மணியளவில் போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

விநாயகர் சிலைகளை கொண்டு செல்ல அனுமதி கிடையாது என கூறி போலீஸார், விநாயகர் சிலைகளை பறிமுதல் செய்தனர். தகவல் அறிந்து இந்து முன்னணி நிர்வாகிகள் போலீஸ் நிலையம் முன்பு குவிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விநாயகர் சிலைகளை வீடுகளில் வைத்து வழிபடுவதற்காகவே கொண்டு செல்கின்றனர், அதனை தடுக்கக் கூடாது என அவர்கள் வலியுறுத்தினர்.

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள அறை பூட்டி சீல் வைக்கப்பட்டு, வெளியே போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். படம்: என்.ராஜேஷ்

ஆனால், இத்தனை சிலைகள் கொண்டு செல்லப்படுவதால் ஊர்வலம் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே, சிலைகளை கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என காவல் துறையினர் உறுதியாக கூறிவிட்டனர்.

இதையடுத்து இரவு 10 மணியளவில் முத்தையாபுரம் போலீஸார் 15 விநாயகர் சிலைகளையும் தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் கொண்டு ஒப்படைத்தனர்.

அந்த விநாயகர் சிலைகளை, வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தனி அறையில் வைத்து அந்த அறைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்நிலையில் இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகள் சிலர் இன்று காலை வட்டடாட்சியர் அலுவலகம் முன்பு திரண்டனர். இதையடுத்து வட்டாட்சியர் அலுவலக நுழைவு வாயிலை போலீஸார் பூட்டினர்.

இதனால் இந்து முன்னணி நிர்வாகிள் சிலர் வட்டாட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு சூடம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் வழிபாடு நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x