

மத்திய அரசு தமிழகத்தின் கடலோர மீனவர்களின் பாதுகாப்பில் போதிய ஆர்வம் காட்டுவதில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 16 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில் கடற்படையினரின் அத்துமீறல்கள் தொடர்கின்றன. இதனைத் தடுத்து நிறுத்தவும் அச்சுறுத்தல் இல்லாமல் சுமுக நிலையில் மீன்பிடித் தொழில் நடைபெறவும் மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இலங்கை அரசின் பாதுகாப்புக்கு உதவுவதில் தீவிரம் காட்டும் மத்திய அரசு தமிழகத்தின் கடலோர மீனவர்களின் பாதுகாப்பில் போதிய ஆர்வம் காட்டுவதில்லை.
தமிழகத்தின் அழுத்தம் காரணமாக மீனவர்களை விடுதலை செய்தாலும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்த மீன்பிடி படகுகளையும், கருவிகளையும் திருப்பி வழங்குவதில்லை.
இதனால் இழப்புக்கு ஆளாகும் மீனவர்கள் வாழ்க்கை நெருக்கடியின் தீவிரத்தை மத்திய அரசு உணர்ந்து மீனவர்களையும் அவர்களின் உடைமைகளையும் விடுவித்து மீன்பிடி தொழிலை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.