Last Updated : 21 Aug, 2020 02:26 PM

 

Published : 21 Aug 2020 02:26 PM
Last Updated : 21 Aug 2020 02:26 PM

புதுச்சேரியில் 4 நாட்களில் கரோனாவுக்கு 29 பேர் உயிரிழப்பு; புதிதாக 313 பேருக்குத் தொற்று உறுதி

புதுச்சேரியில் இன்று புதிதாக 313 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் மேலும் 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் இறப்பு எண்ணிக்கை 143 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக கடந்த 4 நாட்களில் 29 பேர் இறந்துள்ளனர்.

இதுகுறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (ஆக.21) கூறும்போது, "புதுச்சேரியில் அதிகபட்சமாக 1,229 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 299, காரைக்காலில் 8, ஏனாமில் 5, மாஹேவில் 1 என 313 பேருக்குத் (25.46 சதவீதம்) தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார்

மேலும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு புதுச்சேரியில் 5 பேர், காரைக்காலில் ஒருவர் என 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

வில்லியனூர் எஸ்.எம்.வி. புரத்தைச் சேர்ந்த 62 வயது முதியவர், முத்தியால்பேட்டை செயின்ட் ரோசனா வீதியை சேர்ந்த 88 வயது மூதாட்டி ஆகிய இருவரும் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியிலும், வெங்கட்டா நகர் குமரகுருபள்ளம் அந்தோனி கோயில் வீதியை சேர்ந்த 61 வயது முதியவர், முதலியார்பேட்டை வெள்ளாழர் வீதி 2-வது குறுக்கு தெருவை சேர்ந்த 57 வயது பெண், தட்டாஞ்சாவடி மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்த 48 வயது ஆண் நபர் ஆகிய மூன்று பேரும் ஜிப்மரிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

அதேபோல், காரைக்கால் பி.கே.சாலையை சேர்ந்த 81 வயது முதியவர் தொற்றால் பாதிக்கப்பட்டு காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 143 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.49 சதவீதமாக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 9,594 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் புதுச்சேரியில் 1,838 பேர், காரைக்காலில் 87 பேர், ஏனாமில் 39 பேர் என 1,964 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோல், புதுச்சேரியில் 1,392 பேர், காரைக்காலில் 77 பேர், ஏனாமில் 81 பேர், மாஹேவில் 3 பேர் என மொத்தம் 1,553 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 3,517 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று புதுச்சேரியில் 282 பேர், காரைக்காலில் 16 பேர், ஏனாமில் 2 பேர் என மொத்தம் 300 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 5,934 ஆக (61.85 சதவீதம்) அதிகரித்துள்ளது. இதுவரை 61 ஆயிரத்து 343 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 50 ஆயிரத்து 170 பரிசோதனைகள் 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது" எனத் தெரிவித்தார்.

புதுச்சேரியில் வேகமாக கரோனா தொற்று பரவி வருகிறது. எப்போதும் இல்லாத வகையில் நேற்று புதிய உச்சமாக 554 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று 313 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தினமும் சராசரியாக 300 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக, கடந்த 10 நாட்களில் 3,774 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கடந்த 4 நாட்களில் 29 பேர் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x