Published : 21 Aug 2020 02:11 PM
Last Updated : 21 Aug 2020 02:11 PM

விநாயகர் சிலைகளை தனிநபர்கள் நீர்நிலைகளில் கரைக்க அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு

வீடுகளில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை தனிநபர்கள் நீர்நிலைகளில் கரைக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பொது இடங்களில் சிலைகள் வைக்கவும், ஊர்வலமாக செல்லக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.

கரோனா தொற்று காரணமாக நாடு முழுதும் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டம் அமலில் உள்ள நிலையில், பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால், விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்து செல்லவும், சிலைகளை கடலில் கரைக்கவும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி கரோனா தொற்று பரவாமலிருக்கவே இந்த தடை என்றும், பொதுமக்கள் வீட்டிலேயே விநாயகர் சிலையை வைத்து வழிபடவேண்டும் என அரசு அறிவித்துள்ளது. விநாயகர் சிலையை தடையை மீறி பொது இடங்களில் நிறுவுவோம் என இந்து அமைப்புகள் சில அறிவித்துள்ளன.

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நேற்று, இதுகுறித்த வழக்கில் அரசின் முடிவு சரிதான் என உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் தடை உத்தரவை எதிர்த்து திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த இல. கணபதி என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்துச்சென்று நீர் நிலைகளில் கரைக்கவும் அனுமதிக்க வேண்டும் என கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம் சுந்தரஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது,

அப்போது நீதிபதிகள், “விநாயகர் சதுர்த்தி ஆண்டாண்டு காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்களின் உணர்வுபூர்வமான விஷயமாக இருக்கிறது. அரசு இந்த விவகாரத்தில் ஏதேனும் தளர்வுகள் அறிவிக்க வாய்ப்புள்ளதா? சிலைகளை செய்யும் கைவினை கலைஞர்களின் நலனையும் கருத்தில் கொள்ளவேண்டும்”. என தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணிடம் கேள்வி எழுப்பினார்.

“அதேசமயம் கரோனா தொற்று குறித்து நாங்கள் நன்கு அறிந்து உள்ளோம், பெரிய அளவிலான ஊர்வலங்களை அனுமதிக்க முடியாது என்பதில் நீதிமன்றத்திற்கு மாற்றுக் கருத்தில்லை, 5 அல்லது 6 நபர்களுக்கு மிகாமல் பேரிடர் விதிகளை பின்பற்றி பொதுமக்கள் சிலையை வைத்து வழிபட்ட பின் அதனை பெரிய கோயில்கள் அருகில் கொண்டு வைத்து விடுவது, அல்லது தாங்களே சொந்தமாக இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று கடற்கரையில் வைத்து விடுவது போன்றவற்றை அனுமதிக்க சாத்தியக்கூறுகள் உள்ளதா?” எனக் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அரசின் விளக்கத்தை பெற்று பதில் தெரிவிப்பதாக தலைமை வழக்கறிஞர் தெரிவித்த நிலையில் வழக்கு விசாரணை ஒத்தி வைத்திருந்த நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், “மதுரை கிளை நீதிமன்றம் இதுபோன்ற வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. மக்களின் தனிநபர் வழிபாட்டிற்கு அரசு தடையோ கட்டுப்பாடோ விதிக்கவில்லை. மெரினா கடற்கரை தற்போது தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது”. என்று வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “சிறு கோயில்கள் திறக்கப்பட்டுள்ளன. மெரினாவில் சிலைகளை கரைத்துவிட்டு செல்வதில் என்ன பிரச்சனை இருக்கப்போகிறது? மீனவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதே. கூவம் ஆற்றில் கூட விநாயகர் சிலைகளை கரைக்கலாமே? சிலைகளை கரைக்க வரும் மக்கள் அங்கேயே தங்கி விடுவதில்லையே?” என கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர், “ஆயிரக்கணக்கான மக்கள் கூடும்போது, சட்டம் ஒழுங்கு பிரச்சனை வந்தால் அரசு என்ன செய்வது?” என்று தெரிவித்தார்.

இதையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், “கடந்த 22-ம் தேதியே தமிழக அரசு விநாயகர் ஊர்வலத்திற்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. காலம் காலமாக இந்த நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. சிலைகளை வீட்டுக்குள்ளேயே வைத்திருக்க முடியாது என மனுதாரர் தரப்பில் தெரிக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் சிலைகள் வைக்கவும், ஊர்வலமாக செல்லக்கூடாது. விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதால் எந்த ஒரு தொற்றுப்பரவலும் ஏற்பட வாய்ப்பில்லை. ஊர்வலமாக சிலைகளை கொண்டுசெல்ல, சிவசேனாவும் இந்து முன்னணியும் மறுப்பு தெரிவித்துள்ளன.

தனிநபர்கள் விநாயகர் சிலையை பூஜை செய்த பிறகு, அருகில் உள்ள கோயில்களுக்கு வெளியேவோ, அல்லது தனிநபராக சிலைகளை எடுத்து சென்று அருகில் உள்ள நீர்நிலைகளிலோ கரைக்கலாம். சென்னையில் மெரினா கடற்கரையை தவிர்த்து பிற நீர்நிலைகளில் சிலைகளை கரைக்கலாம், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடவும், ஊர்வலம் நடத்தவும் விதித்த தடையை தளர்த்த இயலாது.

இவை அனைத்தும் அரசின் கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்குள் அடங்கும். மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர்”. என்று உத்தரவிட்டு விநாயகர் சிலைகள் வைத்து வழிபடவும், ஊர்வலம் நடத்தவும் தடை விதித்ததை எதிர்த்த வழக்கை முடித்து வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x