Published : 21 Aug 2020 10:09 AM
Last Updated : 21 Aug 2020 10:09 AM

சாத்தான்குளம் எஸ்ஐகள் தாக்கியதாக புகார்: இளைஞரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை

தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்துக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த ராஜாசிங்.

தூத்துக்குடி

சாத்தான்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் தன்னை தாக்கியதாக இளைஞர் கொடுத்த புகாரின் பேரில், அவரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள மேலபனைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ்.ராஜாசிங் (30). ஒரு கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் போலீஸார் இவரைகடந்த மே 18-ம் தேதி கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர். அங்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இந்நிலையில் சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஹேமா கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ராஜாசிங்கிடமும் விசாரணை நடத்தினார்.

அப்போது தன்னையும் சாத்தான்குளம் உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் ஆகியோர் கடுமையாக தாக்கியதாக ராஜாசிங் புகார் தெரிவித்துள்ளார். இப்புகார் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த சாத்தான்குளம் போலீஸுக்கு நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார். அதன்பேரில் உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் ஆகிய இருவர் மீதும் சாத்தான்குளம் போலீஸார் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் டிஜிபி உத்தரவின் பேரில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. தூத்துக்குடி சிபிசிஐடி போலீஸ் சார்பில் 8 பிரிவுகளின் கீழ் புதிதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ராஜாசிங்குக்கு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பினர்.

அதன்பேரில் நேற்று காலை 11 மணியளவில் தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் அவர் ஆஜரானார். அவரிடம் சிபிசிஐடி ஆய்வாளர் சபிதா தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். மாலை வரை விசாரணை நீடித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x