Published : 21 Aug 2020 07:27 AM
Last Updated : 21 Aug 2020 07:27 AM

விநாயகர் சதுர்த்தி விழா குறித்து இந்து முன்னணி முடிவை பாஜக ஏற்கும்: தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அறிவிப்பு

விநாயகர் சதுர்த்தி தொடர்பாக இந்து முன்னணி எடுக்கும் முடிவை பாஜக ஏற்கும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் போராட்ட வீரர்ஒண்டிவீரன் நினைவு தினத்தையொட்டி சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் அவரது உருவப்படத்துக்கு எல்.முருகன், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், மாநிலப் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் நேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் எல்.முருகன் கூறியதாவது:

நாட்டிலேயே தமிழகத்தில் மட்டும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி மறுக்கப்படுவது வேதனை. விநாயகர் சதுர்த்தி தொடர்பாக இந்து முன்னணி எடுக்கும் முடிவை பாஜக ஏற்கும்.

மத்திய அரசுப் பணிகள் அனைத்துக்கும் பொது நுழைவுத் தேர்வு நடத்துவது என்ற மத்திய அமைச்சரவையின் முடிவு வரவேற்கத்தக்கது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளிலேயே உருது, தெலுங்கு உள்ளிட்ட மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. சிபிஎஸ்இ, மெட்ரிக் பள்ளிகளில் ஆங்கிலம், தமிழ் மொழிகளோடு 3-வது மொழியாக இந்தி உள்ளிட்ட மொழிகள் கற்பிக்கப்படுகின்றன.

அரசுப் பள்ளிகளில் படிக்கும் பட்டியலின, பிற்படுத்தப்பட்ட, ஏழை மாணவர்களுக்கு மட்டும்3-வது மொழி படிக்கும் வாய்ப்புமறுக்கப்படுகிறது. இது நியாயம்தானா என்பதே பாஜகவின் கேள்வி. இவ்வாறு எல்.முருகன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x