Last Updated : 20 Aug, 2020 04:34 PM

 

Published : 20 Aug 2020 04:34 PM
Last Updated : 20 Aug 2020 04:34 PM

பொது இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய அனுமதி இல்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு

விநாயகர் சதுர்த்தி தினத்தன்று பொது இடங்களில் விநாயகர் சிலைகளைப் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்த அனுமதி கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியை சேர்ந்த ராமசாமி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

''தமிழகத்தில் ஆக. 22-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும். கரோனா பரவல் காரணமாக இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும், ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் தடை விதித்து தமிழக அரசு ஆகஸ்ட் 13-ல் உத்தரவிட்டுள்ளது.

கரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் உரிய வழிகாட்டுதலுடன் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் பழமையான விழா என்ற அடிப்படையில் ஒடிசா பூரி ஜெகன்நாதர் கோவிலில் விழாவுக்கு அனுமதி வழங்கியது.

எனவே பொது இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தவும், ஊர்வலமாகக் கொண்டுச் செல்லவும் தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, சமூக இடைவெளி மற்றும் உரிய வழிகாட்டுதல்களுடன் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்''.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், ''விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் ஆண்டாண்டு காலமாக நடைமுறையில் உள்ள வழக்கம். அந்த வழக்கப்படி பொது இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்த அனுமதி வழங்க வேண்டும். மகாராஷ்டிரம், கோவா, கர்நாடகா மாநிலங்களில் கரோனா தொற்று அதிகமாக இருந்த போதிலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்திலும் அனுமதி வழங்க வேண்டுm'' எனத் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், ''தற்போது இயல்பான சூழல் இல்லை. கரோனா தொற்றுp பரவி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் பொது இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய அனுமதி வழங்க முடியாது. கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழக அரசு பிறப்பிக்கும் உத்தரவில் தலையிட முடியாது.

மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா, சித்திரை திருவிழா உள்ளிட்ட 400 ஆண்டுகளுக்கு மேலாகக் கொண்டாடப்படும் பல விழாக்களுக்கும் கரோனா பரவல் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது'' என்றனர்.

மீண்டும் மனுதாரர் தரப்பில், ''விநாயகர் சிலை ஊர்வலங்கள் வேண்டாம். கிராமத்திற்கு ஒரு விநாயகர் சிலை வைக்க அனுமதிக்க வேண்டும். உரிய சமூக இடைவெளி மற்றும் கிருமிநாசினிப் பயன்பாட்டுடன் விழாவைக் கொண்டாடலாம். பொதுமக்களும் பெருமளவில் பங்கேற்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கிறோம். எனவே அனுமதி வழங்க வேண்டும்'' எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், ''கரோனா தொற்றுப் பரவி வரும் சூழலில் பொது இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய அனுமதிக்க முடியாது. அனுமதி வழங்கினால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் பாதிக்கப்படுவர். கரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் மக்கள் பெருமளவில் கூடுவது அதிக ஆபத்தை ஏற்படுத்தும்.

மத வழிபாடு மற்றும் உணர்வுபூர்வமான விவகாரங்களில் தற்போதைய நோய்த்தொற்று சூழலைக் கருத்தில் கொண்டே தற்போது முடிவெடுக்க வேண்டும். எனவே கரோனா நோய்த்தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கை தொடர்பான அரசின் உத்தரவில் தலையிட இயலாது. அரசின் முடிவு சரியானதே. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது'' என உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x