Published : 20 Aug 2020 01:13 PM
Last Updated : 20 Aug 2020 01:13 PM

‘பாடும் நிலா எழுந்து வா’...: கூட்டுப் பிரார்த்தனைக்கு ரஜினிகாந்த் அழைப்பு

எஸ்.பி.பாலசுப்ரமணியம் நலம்பெற திரையுலகினர் இன்று மாலை கூட்டுப்பிரார்த்தனை நடத்துகின்றனர். இதற்கு அழைப்பு விடுத்து நடிகர் ரஜினிகாந்தும் பதிவிட்டுள்ளார். ‘பாடும் நிலா எழுந்து வா’ என கூட்டுப்பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களை தனது குரல் வளத்தால் கட்டிப்போட்டிருப்பவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். தனது பண்பான நடத்தையால் கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களை கவர்ந்த எஸ்.பி.பியை கரோனா தாக்கியது.

உலகில் லட்சக்கணக்கானோர் இறப்புக்கும், கோடிக்கணக்கானோர் பாதிப்புக்கும், பொருளாதார வீழ்ச்சிக்கும் காரணமான கரோனா பாதிப்பு பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது.

பல அரிய மதிப்புமிக்க உயிர்களை கரோனா பறித்துள்ளது. கரோனாவால் தானும் பாதிக்கப்பட்டதாகவும், அறிகுறி எதுவுமில்லாவிட்டாலும் பாதுகாப்பு கருதி மருத்துவமனையில் அனுமதித்துக்கொள்கிறேன் என காணொலியில் உலகெங்கும் உள்ள ரசிகர்களுக்கு எஸ்பிபி செய்தி சொன்னார்.

பலரும் சாதாரணமான அறிகுறிதானே என இருந்தனர். ஆனால் ரசிகர் மனங்களை அதிர்ச்சியூட்டும் விதமாக எஸ்பிபியின் உடல் நிலை திடீரென மோசமானது. வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்பட்டது. இந்நிலையில் அவரது உடல் நிலை கவலைக்கிடமாகவே தொடர்கிறது, எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தனது காந்தக்குரலால் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தென் இந்திய ரசிகர்களை கட்டிப்போட்ட எஸ்பிபி நலம் பெற அனைவரும் பிரார்தித்தனர். எஸ்பிபியின் பால்யகால நண்பர்கள் இளையராஜா, பாரதிராஜா ஆகியோர் உருக்கமுடன் எழுந்துவா பாலு என கோரிக்கை விடுத்தனர். திரையுலக, அரசியல் பிரபலங்கள், கோடிக்கணக்கான ரசிகர்கள் கோரிக்கையும், பிரார்த்தனையும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மாலை 6-00 மணிக்கு எஸ்பிபி நலம்பெற திரையுலகினர் அவரது பாடலை பதிவிட்டு கூட்டுப் பிரார்தனை நடத்த உள்ளனர். இளையராஜா, பாரதிராஜா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் இதற்கான கோரிக்கையை விடுத்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்தும் இந்த கோரிக்கையில் இணைந்துள்ளார்.

ஏற்கெனவே காணொலியில் எஸ்பிபி நலம் பெற வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த் தற்போது கூட்டுப்பிரார்த்தனை செய்வோம் என அழைப்பு விடுத்துள்ளார்.

அவரது பதிவு வருமாறு:

“ ‘பாடும் நிலா எழுந்து வா...கூட்டுப்பிரார்த்தனை செய்வோம்’....எஸ்.பி.பி. யை மீட்டெடுப்போம்! 20-8-2020 இன்று மாலை 6-00 மணிமுதல் 6-05 வரை ” . என பதிவிட்டுள்ளார்.

இன்று மாலை 6-00 மணிக்கு உலகெங்கும் திரையுலகினர், அவரது ரசிகர்கள் கூட்டுப்பிரார்த்தனை செய்ய உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x