Published : 20 Aug 2020 07:50 AM
Last Updated : 20 Aug 2020 07:50 AM

‘கற்பகத்தரு என முன்னோர்களால் அழைக்கப்படுபவை’: செங்கல் சூளைக்காக வெட்டி அழிக்கப்படும் பனை மரங்கள் - தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

செங்கம் பகுதியில் செங்கள் சூளைக்காக வெட்டி அழிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட பனைமரங்கள்.

திருவண்ணாமலை

தமிழகத்தின் மாநில மரமும், இயற்கை செல்வங்களில் ஒன்றான பனைமரங்களை செங்கல் சூளைக்காக வெட்டி அழிக்கப்படுவதை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கற்பகத்தரு என அழைக்கப்படும் பனை மரத்தின் வேர் முதல் உச்சி வரை அனைத்து பொருட்களும் மக்களுக்கு பயன்படக் கூடியவை. பனங்கிழங்கு, நுங்கு, பதநீர், பனங் குருத்து, பனம்பழம் உள்ளிட்ட உணவுப் பொருட்களும், பதநீரில் இருந்து கருப்பட்டி, பனங்கற்கண்டு உள்ளிட்ட பல்வேறு வகையான உணவுப் பொருட்களும் கிடைக்கின்றன.

மனித இனத்துக்கு மட்டுமின்றி, நீர் ஆதாரத்துக்கும் பனைமரம் மிகப்பெரிய பங்களிப்பை கொடுக் கிறது. ஆதிக்காலத்தில் ஏரிக்கரை உட்பட நீர்நிலைகள் உள்ள கரையோரங்களில் பனைமரங்கள் வளர்க்கப்பட்டன. இதன் முக்கியத் துவத்தை அக்கால மக்கள் உணர்ந் திருந்தனர். ஆனால், இக்கால மக்கள், அதன் முக்கியத்துவத்தை உணராமல் பனைமரங்களை அழித்து வருகின்றனர். நீர்நிலைகள் மற்றும் புறம்போக்கு இடங்களில் வளர்ந்துள்ள பனைமரங்களை வெட்டி சாய்த்து, அதன் சுவடே இல்லாமல் அழித்து வருகின்றனர். இவ்வாறு வெட்டப்படும் பனைமரங்கள், செங்கல் சூளைக்கு பயன்படுத்தப்படுகின்றன.

செங்கல் தரமாக உருவாக, அதற்கு மிதமான வெப்பம் தேவைப்படுகிறது. அந்த வெப்பத்தை நீண்ட நேரம் தரக்கூடியது பனைமரம் என்கின்றனர். செங்கல் சூளைக்கு தேவைப்படும் பனைமரத்தை விற்பனை செய்ய தரகர்கள் கூட்டம் அதிகளவில் உள்ளன. அவர்கள், ஒவ்வொரு கிராமமாக சென்று, பனைமரம் இருக்கும் இடங்களை தெரிந்து கொள்கின்றனர். பின்னர், கிராமத்தின் முக்கிய புள்ளிகளை கவனித்துவிட்டு பனை மரத்தை வெட்டி கடத்துகின்றனர். இதனை தடுக்க வேண்டிய அரசு இயந்திரமும் துணையாக இருக்கிறது என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.

மேலும் அவர்கள் கூறும்போது, “பனைமரத்தின் ஆயுட்காலமானது 100 ஆண்டுகள். அதேநேரத்தில் பனை ஓலையின் ஆயுட்காலம் என்பது சுமார் 400 ஆண்டுகள். சங்ககாலத்தில் ஓலைச் சுவடியில் இலக்கியங் கள் எழுதப்பட்டுள்ளன. இப்படியாக தமிழர் வாழ்வில் ஒன்றாக இணைந்திருந்த பனைமரத்தை வெட்டி சாய்ப்பது என்பது கொடிய செயலாகும். பனைமரத்தின் முக்கியத் துவத்தை சில இளைஞர்கள் உணர்ந்துள்ளதால், பனைவிதைகளை விதைக்க தொடங்கி உள்ளனர். இதற்கு, அரசும் உதவுகிறது.

அதே நேரத்தில் அனைத்து உயிர்களுக்கும் நூறாண்டு உதவும் பனை மரங்கள் வெட்டி சாய்க்கப்படுவதை அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும். கடத்தல்காரர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். செங்கல் சூளைக்கு பனைமரத்துக்கு வெட்டி எரிப்பதற்கு பதிலாக, நீர்நிலைகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை வெட்டி பயன்படுத்தலாம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x