Published : 20 Aug 2020 07:11 AM
Last Updated : 20 Aug 2020 07:11 AM

வாழைப்பழம் தொண்டையில் சிக்கி கல்லூரி மாணவி உயிரிழப்பு

தொண்டையில் வாழைப்பழம் சிக்கியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சட்டக் கல்லூரி மாணவி உயிரிழந்தார்.

வால்பாறை அருகே உள்ள சோலையாறு எஸ்டேட் பஜார் பகுதியில் வசித்துவருபவர் செல்வரத்தினம். இவரது மூன்றாவது மகள் தாரணி (19), திருச்சியில் உள்ள சட்டக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்துவந்தார். வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட இவர், கடந்த 2 ஆண்டுகளாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். தாரணிக்கு தினசரி உணவு மற்றும் மாத்திரைகளை தந்தை செல்வரத்தினம்தான் கொடுத்துவந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் கடையில் இருந்த செல்வரத்தினம், மதியம் வீட்டுக்கு வர தாமதமாகியுள்ளது. மாலை 3 மணி வரை உணவு சாப்பிடாததால், தாரணி வாழைப்பழம் ஒன்றை சாப்பிட்டுள்ளார். அந்த நேரத்தில் அவருக்கு வலிப்பு ஏற்பட்டது.

இதனால் வாழைப்பழம் தொண்டையில் சிக்கி, மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதைக் கண்ட தாரணியின் தாயார் செல்வி, தொண்டையில் சிக்கிய வாழைப்பழத்தை எடுக்க முயற்சி செய்துள்ளார். அதற்குள் தாரணி மயங்கி கீழே விழுந்தார் .

இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு தாரணியை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வால்பாறை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x