வங்கி கடன் தவணையை செலுத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க வாய்ப்பு: உயர் நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி தகவல்

வங்கி கடன் தவணையை செலுத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க வாய்ப்பு: உயர் நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி தகவல்
Updated on
1 min read

வங்கி கடன் தவணையை செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வாய்ப்புள்ளது என உயர் நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில பொதுச் செயலாளர் சுகந்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘கரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு காரணமாக வங்கிக் கடன் தவணை மற்றும் வட்டியை செலுத்த ரிசர்வ் வங்கி 6 மாதம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

நிறுவனங்கள் நெருக்கடி

ஆனால் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் கொடுத்த சிறு கடன் நிறுவனங்கள் கடன் தொகையை திருப்பி செலுத்த கட்டாயப்படுத்துகின்றன. எனவே ரிசர்வ் வங்கியின் உத்தரவை மீறி கடனை வசூலிக்க முயற்சிக்கும் நிதி நிறுவனங்கள் மீது மகளிர்சுயஉதவி குழுக்கள் அளிக்கும்புகார்களை பெற மாவட்டவாரியாக தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும். அத்துடன் கடன்தொகை மற்றும் வட்டியை செலுத்துவதற்கான காலக்கெடுவை வரும் 2020 செப்டம்பரில் இருந்து 2021 பிப்ரவரி வரை நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் உத்தரவிட வேண்டும்’’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ரிசர்வ் வங்கி தரப்பில், ‘‘வங்கிகள் மீதான புகார்களை விசாரிக்க ஏற்கெனவே மாவட்டம் தோறும் குறைதீர் அலுவலர்கள் எனப்படும் ‘ஆம்புட்ஸ்மேன்’ நியமிக்கப்பட்டுள்ளனர். கடன் தவணை மற்றும் வட்டி செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பது என்பது மத்திய, மாநில அரசுகளின் கொள்கை முடிவு. அதேநேரம் தற்போதுள்ள இக்கட்டான சூழலில் காலஅவகாசம் மேலும் சில மாதங்களுக்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக ஆராயப்பட்டு வருகிறது’’ என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வரும் செப்.8-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in