

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் மாட்டுச்சாணத்தால் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
மானாமதுரை பகுதியில் தயாரிக்கப்படும் மண்பாண்டப் பொருள்களுக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது. இங்கு சீசனுக்கு ஏற்ப மண்பாண்டப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
ஆக.22-ம் தேதி விநாயகர் சதுர்த்தி என்பதால் மண்பாண்டத் தொழிலாளர்கள் விநாயகர் சிலைகளை தயாரித்து வருகின்றனர். மேலும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அரசு தடை விதித்துள்ளதால், பெரிய விநாயகர் சிலைகளை தயாரிக்காமல், சிறிய அளவிலான சிலைகளை தயாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் மானாமதுரை அருகே குஞ்சுக்காரனேந்தலில் மாரிமுத்து, அவரது மனைவி தீபா ஆகிய இருவரும் மாட்டுச்சாணத்தால் விநாயகர் சிலைகளை தயாரித்து வருகின்றனர்.
இதில் எந்த மண் வகையையும் சேர்க்காமல் மாட்டுச்சாணத்துடன் கடுக்காய் உள்ளிட்ட 13 வகை பொருள்களை சேர்த்து விநாயகர் சிலைகளை தயாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து மாரிமுத்து, தீபா கூறியதாவது: மாட்டுச்சாணத்தால் உருவாக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கு சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது.
இதனால் ஆர்டரின் பெயரில் விநாயகர் சிலைகளை சரக்கு விமானங்கள் மூலம் ஏற்றுமதி செய்கிறோம். இத்தகைய சிலைகளை நம்ம பகுதிகளில் விற்பனை செய்யவில்லை, என்றனர்.