Last Updated : 19 Aug, 2020 06:36 PM

 

Published : 19 Aug 2020 06:36 PM
Last Updated : 19 Aug 2020 06:36 PM

குடியாத்தம் கூட்டுறவு வங்கியில் ரூ.3.5 கோடி மோசடி; வங்கியில் பணியாற்றிய மேலாளர் சஸ்பெண்ட்

பிரதிநிதித்துவப் படம்

குடியாத்தம்

குடியாத்தம் மத்திய கூட்டுறவு வங்கியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்குக் கடன் தொகை வழங்கியதாக ரூ.3.5 கோடி மோசடியில் ஈடுபட்டதாக வங்கி மேலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

வேலூர் மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கி மூலம், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு வங்கி கடன் சங்கங்கள், மத்திய கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு கூட்டுறவு சங்கங்களுக்குக் குறைந்த வட்டியில் கடன் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாய கடன், நகைக்கடன், பயிர் கடன், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் கடன் தொகையை வேலூர் மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கி வசூலித்து வருகிறது.

இந்நிலையில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் மத்திய கூட்டுறவு வங்கிக்கு வழங்கப்பட்ட கடன் தொகை மீண்டும் முறையாக செலுத்தப்படவில்லை என்பது தணிக்கையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, கூட்டுறவு வங்கி தணிக்கை குழுவினர் குடியாத்தம் மத்திய கூட்டுறவு வங்கியில் வழங்கப்பட்ட கடன் தொகை குறித்தும், வரப்பெற்ற கடன் தொகை குறித்து ஆய்வு நடத்தினர்.

இதில், கடந்த 2018-ம் ஆண்டில் மகளிர் சுய உதவி குழுக்கள் பெயரில் ரூ.3.5 கோடி வங்கிக்கடன் வழங்கப்பட்டதாகவும், அந்த தொகை திருப்பி செலுத்தப்படவில்லை என்பது தெரியவந்தது. இதைதொடர்ந்து, வங்கி மேலாளராக பணியாற்றி வந்த உமா மகேஸ்வரி மற்றும் வங்கி பணியாளர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது.

இதைதொடர்ந்து, வேலூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் (பொறுப்பு) முனிராஜ் குடியாத்தம் மத்திய கூட்டுறவு வங்கியில் ஆய்வு நடத்தினார். அதில், வங்கி மேலாளராக பணியாற்றி வந்த உமா மகேஸ்வரி மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு கடன் தொகை வழங்கியதாக ரூ.3.5 கோடி மோசடி செய்தது கண்டறிந்து அதன் அறிக்கையை ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் திருகுண ஐயப்பத்துரையிடம் சமர்பித்தார்.

இதைத்தொடர்ந்து, மகளிர் சுயஉதவிக்குழு பெயரில் ரூ.3.5 கோடி மோசடி செய்த கூட்டுறவு வங்கி மேலாளர் உமா மகேஸ்வரியை இன்று (ஆக.19) சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x