Published : 19 Aug 2020 04:08 PM
Last Updated : 19 Aug 2020 04:08 PM

இ-பாஸ் மூலம் சென்னைக்கு வரும் அனைவரையும் தனிமைப்படுத்த வேண்டும்: மாநகராட்சி ஆய்வுக்கூட்டத்தில் முடிவு

சென்னை

வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என நகராட்சி நிர்வாக கூடுதல் தலைமைச் செயலர் ஹர்மந்தர் சிங் மாநகராட்சி ஆய்வுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பு வருமாறு:

“பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 7, 8, 10, 11 மற்றும் 13 ஆகிய மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், தலைமையில் இன்று (19.08.2020) ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தெரிவித்ததாவது :

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள், வீடுகள்தோறும் சென்று கரோனா தொற்று அறிகுறி உள்ளவர்களை கண்டறிதல், கரோனா தொற்று பரிசோதனைகளை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகளின் மூலம் தொற்று உள்ள நபர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மேலும், இவர்களோடு தொடர்பில் இருந்த நபர்கள் கண்டறியப்பட்டு தனிமைப் படுத்தப்படுகின்றனர். இதனால் சமீபகாலமாக சென்னையில் வைரஸ் தொற்று பரவுதல் வெகுவாக குறைந்துள்ளது.

தற்பொழுது, பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அதேநேரத்தில் வைரஸ் தொற்று பரவுதலை தடுக்கும் வகையிலும் பல்வேறு தளர்வுகளை முதல்வர் அறிவித்துள்ளார். அதன்படி, அவசரத் தேவைக்காக வழங்கப்பட்டு வந்த அனுமதி (E-Pass) எளிமையாக்கப்பட்டு தகுந்த காரணங்கள் இருப்பின் உடனடியாக வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் இனிவருங்காலங்களில் சென்னையை நோக்கி வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். குறிப்பாக, நேற்று (18.08.2020) ஒரு நாளில் மட்டும் 18,853 மனுக்கள் பெறப்பட்டு அதில் 18,823 நபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த பயண அனுமதி பெற்று வரும் நபர்களை கண்காணித்து அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக தொழிற்சாலை மற்றும் இதர அலுவலங்களின் வேலை காரணமாக வரும் நபர்களின் தகவல்களை அந்தந்த மண்டல அலுவலர்கள் சேகரித்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் மண்டலங்களில் வியாபார ரீதியாக வெளி மாவட்டங்களுக்கு சென்று வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அதேபோன்று அம்பத்தூர் மண்டலம், கிண்டி தொழிற்பேட்டை அமைந்துள்ள அடையாறு மண்டலம் ஆகியவற்றில் தொழிற்சாலைகள் அதிகம் இருப்பதால், வெளிமாநில தொழிலாளர்கள் வருகையும் அதிகரிக்கும். இதுதொடர்பான தகவல்களையும் சேகரித்து அவர்களையும் முறையாக தனிமைப்படுத்த வேண்டும்.

கரோனா வைரஸ் தொற்று பாதித்த பகுதிகளில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் மாநகராட்சியின் வழிமுறைகளை பின்பற்றாத நபர்களின் மீதும், வெளியிடங்களுக்கு வரும் போது முகக்கவசம் அணியாதவர்கள் மீதும், சமூக இடைவெளியை பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களின் மீதும் காவல்துறை உதவியுடன் சட்டப்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

என நகராட்சி நிர்வாகம் கூடுதல் தலைமைச் செயலாளர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அரசு முதன்மைச் செயலாளர் இராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ், கூடுதல் காவல் ஆணையாளர் தினகரன், இணை ஆணையாளர் (சுகாதாரம்) மதுசுதன் ரெட்டி, துணை ஆணையாளர் (வருவாய் (ம) நிதி) மேகநாத ரெட்டி, உயர் அலுவலர்கள், காவல்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்”.

இவ்வாறு சென்னை மாநகராட்சி அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x