Published : 19 Aug 2020 03:28 PM
Last Updated : 19 Aug 2020 03:28 PM

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை: நீதிமன்றங்கள் தடையால் மேற்கொண்டு நடவடிக்கை இல்லை: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்கு சில உயர் நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளதால், மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சுற்றுசூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கையை கடந்த மார்ச் மாதம் 23-ம் தேதி வெளியிட்ட மத்திய அரசு, ஏப்ரல் 11/2020 இல் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வரைவு அறிக்கையை அரசிதழில் வெளியிட்டது. அது தொடர்பான கருத்துகள் மற்றும் ஆட்சேபனையை தெரிவிக்க அவகாசம் வழங்கப்பட்டது.

பிராந்திய மொழிகளில் அதன் மொழிபெயர்ப்பை வெளியிடாமல், வரைவு குறித்த கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிக்க கோருவது ஏற்புடையதல்ல என்பதால், வரைவு அறிக்கை மீதான நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும், அனைத்து மாநில மொழிகளிலும் வரைவு அறிக்கையை வெளியிட உத்தரவிட வேண்டும் என மீனவர் நல சங்கம் சார்பில் தியாகராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு கடந்த முறை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசுத் தரப்பில், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு தயாராக உள்ளது எனவும், அதுகுறித்து எழுத்துப்பூர்வமான விளக்கத்தை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு அவகாசம் வழங்கிய நீதிபதிகள் வழக்கை இன்று (ஆகஸ்டு 19) ஒத்திவைத்திருந்தனர்.

இந்த வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “அனைத்து மொழிகளிலும் அறிக்கையை வெளியிட வேண்டும் என டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது எனவும், ஏற்கனவே வரைவு அறிக்கைக்கு பிற உயர் நீதிமன்றங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதால், அதன் மீது எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கப்படாது” என்றும் தெரிவித்தார்.

டில்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாகவும், இங்கு தொடரப்பட்டுள்ள வழக்கில் விளக்கம் அளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை செப்டம்பர் 8-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x