சடலத்தை மாற்றி தகனம் செய்த புதுச்சேரி அரசு மருத்துவமனை: கணவரிடம் மன்னிப்பு கேட்டனர்

சடலத்தை மாற்றி தகனம் செய்த புதுச்சேரி அரசு மருத்துவமனை: கணவரிடம் மன்னிப்பு கேட்டனர்
Updated on
1 min read

புதுச்சேரி வில்லியனூர் மனவெளி திரிவேணி நகரில் வசிப்பவர் லோகநாதன். இவரது மனைவி குணவேலி (44) கடந்த ஞாயிற்றுக்கிழமை உடல் நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்ற விதிமுறையால், மனைவி சடலத்தை கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு லோகநாதன் கொண்டு வந்தார். அங்கு, மருத்துவர்கள் கரோனோ பரிசோதனைக்கு உட்படுத்தி விட்டு, சடலத்தை பிணவறைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் இறந்த குணவேலிக்கு கரோனா தொற்று இல்லை என மருத்துவ பரிசோதனை வந்தது. அந்த சான்றுடன், நேற்று காலை லோகநாதன் மற்றும் அவரது உறவினர்கள் ஆம்புலன்ஸ் உடன் கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு வந்தனர்.

பிணவறைக்கு சென்று பார்த்தபோது குணவேலியின் உடல் இல்லை என்று அங்கிருப்பவர்கள் தெரிவிக்க, உடனே இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடலை தேடினர்.

இந்நிலையில் நேற்று மாலை கரோனா தொற்றுடன் இறந்த மற்றொரு பெண்ணுக்குப் பதிலாக குணவேலியின் சடலத்தை மாற்றி எரிந்தது விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து அரசு மருத்துவமனை நிர்வாகத்தில் இறந்த குணவேலி குடும்பத்தினரிடம், "உடல்நலம் குறைவு காரணமாக இறந்த குணவேலியின் உடல், பிரேத பரிசோதனை அறையில் இருந்தது. அதன் அருகில் தேங்காய்திட்டு பகுதியைச் சேர்ந்த கரோனா பாதிப்பால் இறந்து போன ஆனந்தாயி (70) உடல் இருந்தது. ஆனந்தாயின் மகள் மற்றும் குடும்பத்தினர் குணவேலி உடலை தனது தாய் என்று அடையாளம் காட்டினர். இதையடுத்து, அரசின் விதிமுறைப்படி அவரது உடல் கருவடிக்குப்பம் இடுகாடுக்கு எடுத்து செல்லப்பட்டு, உடல் தகனம் செய்யபட்டுள்ளது" என்று தெரிவித்து, நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டனர்.

குணவேலி குடும்பத்தினர், “எங்கள் வசம் சடலத்தை தரவில்லை என்பதை எழுத்துப்பூர்வமாக தாருங்கள்; பொறுப்புடன் செயல்பட வேண்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” கோரினர்.

அதைத் தொடர்ந்து உதவி ஆட்சியரிடம் புகாரும் அளித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in