Published : 18 Aug 2020 07:06 PM
Last Updated : 18 Aug 2020 07:06 PM

உயிரிழந்த தூத்துக்குடி காவலர் சுப்ரமணியன் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்: ரூ.50 லட்சம் இழப்பீடு அறிவிப்பு

ரவுடியை பிடிக்கும் முயற்சியில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட வழக்கில் உயிரிழந்த தூத்துக்குடி காவலர் சுப்ரமணியன் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ரூ.50 லட்சம் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என அறிவித்துள்ளார்.

துரைமுத்து என்ற ரவுடியை தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி தலைமையிலான சிறப்புப் படை போலீஸார் தேடி வந்தனர். ஏற்கெனவே 2 கொலைகள் செய்து தலைமறைவாக இருந்த ரவுடி துரைமுத்து முறப்பநாடு அருகே ஆயுதங்களுடன் பதுங்கியிருப்பதாக சிறப்புப் படைக்கு தகவல் வந்துள்ளது. மேலும் ஒரு கொலைக்கு அவர் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வந்தது.

இந்நிலையில், இன்று 5 பேர் கொண்ட காவலர் குழு அப்பகுதிக்கு சென்றது. போலீஸார் வருவதை அறிந்து ரவுடி துரை முத்து தப்பியோட முயன்றுள்ளார். அப்போது போலீஸார் சுற்றி வளைத்துள்ளனர். இதனால் தப்பிச்செல்ல ரவுடி துரை முத்து நாட்டு வெடிகுண்டை எடுத்து வீசியுள்ளார்.

ரவுடி வீசிய நாட்டு வெடிகுண்டு காவலர் சுப்ரமணியன் தலையில் விழுந்துள்ளது. இதில் காவலர் சம்பவ இடத்திலேயே இறந்தார். காயமடைந்த ரவுடி துரை முத்துவும் பின்னர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தால் உயிரிழந்த காவலர் சுப்ரமணியத்தின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் அவரது குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கை:

"தூத்துக்குடி மாவட்டத்தில், கொலை வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வந்த மேலமங்கலகுறிச்சியை சேர்ந்த துரைமுத்து என்பரை கைது செய்வது தொடர்பாக, ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகப்பெருமாள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, அத்தனிப்படைக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், காவல் துறையினர் இன்று (18.8.2020), மணக்கரை சந்திப்புக்கு விரைந்தனர்.

காவல் துறையினரைப் பார்த்த துரைமுத்து மற்றும் அவனது சகோதரன் அங்கிருந்து தப்பி ஓடியதையடுத்து, காவல் துறையினர் அவர்களைத் துரத்திப் பிடிக்க முற்பட்டனர் எனவும், அப்போது துரைமுத்து, தான் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு ஒன்றை காவல் துறையினர் மீது வீசியதில், ஆழ்வார்திருநகரி காவல் நிலைய முதல் நிலைக் காவலர் சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று வந்த செய்தியை அறிந்து நான் மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

அரசுப் பணி மேற்கொள்ளும் போது ஏற்பட்ட இந்த துரதிஷ்டவசமான சம்பவத்தில் உயிரிழந்த முதல் நிலைக் காவலர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த முதல் நிலைக் காவலர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு நிவாரண உதவியாக 50 லட்சம் ரூபாய் வழங்கவும், அவரது குடும்பத்தில் ஒருவருக்குத் தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்”.

இவ்வாறு முதல்வர் அறிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x