செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் நேற்று நெரிசலில் சிக்கிய வாகனங்கள்.
செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் நேற்று நெரிசலில் சிக்கிய வாகனங்கள்.

இ - பாஸ் தளர்வு காரணமாக பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்

Published on

இ - பாஸ் தளர்வு காரணமாக செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் அதிக அளவு வாகனங்கள் சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கரோனா வைரஸ் தொற்றுப் பரவுவதைத் தடுக்க கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் தமிழகத்தில் கடந்த 4 மாதங்களாக ஊரடங்கு அமலில் இருக்கிறது. இடையில் தொற்றுக் குறைவாக இருந்ததால் ஜூன் மாத ஆரம்பத்தில் இ-பாஸ் வழங்குவதில் தளர்வு அறிவிக்கப்பட்டது.

ஆனாலும் இ-பாஸ் பெறுவது மிகவும் கடினமாகத்தான் இருந்தது. முறையாக விண்ணப்பித்தாலும் கிடைப்பதில்லை என்ற புகார் எழுந்தது.

இந்நிலையில் விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ் உடனுக்குடன் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்ததைத் தொடர்ந்து, இ-பாஸ் நடைமுறை எளிதானதால் சென்னைக்கு ஏராளமானோர் வரத் தொடங்கியுள்ளனர்.

இதனால் செங்கல்பட்டு, பரனூர் சுங்கச்சாவடி வழியாக நேற்று வழக்கத்தை காட்டிலும் கூடுதலான வாகனங்கள் சென்னையை நோக்கிச் சென்றன. இதனால் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையடுத்து, செங்கல்பட்டு தாலுகா போலீஸார் போக்குவரத்து நெரிசலை சீர்செய்தனர்.

வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் நெரிசலை குறைக்க சிறிதுநேரத்துக்கு கட்டணம் வசூலிப்பது தவிர்க்கப்பட்டது.

மேலும் பொதுப் போக்குவரத்து இல்லாததால் இரு சக்கர வாகனங்களில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in