

80 வயதான தாயார் வேலூர் சென்று தனது மகள் நளினியை சந்திப்பது சிரமமாக உள்ளதால் நளினியை சென்னை சிறைக்கு மாற்றக்கோரி தாக்கல் செய்த மனுமீது பதிலளிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் அவரை அவரது தாயார் பத்மா, சிறைத்துறை அனுமதி பெற்று, சென்னையிலிருத்து வேலூர் சென்று சந்தித்து வருகிறார்.
இந்நிலையில் நளினியை வேலூரில் உள்ள பெண்கள் சிறையிலிருந்து சென்னையில் உள்ள புழல் சிறைக்கு மாற்றக்கோரி அவரது தாயார் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் மனுவில் தனக்கு 80 வயதாகும் நிலையில், தன் மகளை வேலூர் சென்று பார்த்து வருவதில் சிரமம் இருப்பதாக கூறி, சிறைத்துறையிடம் கடந்த மாதம் மனு அளித்ததாகவும், இதுவரை அந்த மனு பரிசீலிக்கப்படாததால், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து தமிழக அரசும் , சிறைத்துறையும் ஆகஸ்ட் 24-க்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.