தளர்வில்லாத முழு ஊரடங்கால் வீடுகளில் முடங்கிய மக்கள்: தமிழகம் முழுவதும் கடைகள் அடைப்பு

தளர்வில்லாத முழு ஊரடங்கால் வீடுகளில் முடங்கிய மக்கள்: தமிழகம் முழுவதும் கடைகள் அடைப்பு
Updated on
1 min read

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் நேற்றுதளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் மாநிலம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர். வாகன இயக்கம் இல்லாததால் சாலைகள் வெறிச்சோடின.

தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதனால், 7-ம் கட்டமாகஊரடங்கு வரும் 31-ம் தேதி வரைநீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் போல ஆகஸ்ட் மாதத்திலும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 3-வதுஞாயிறான நேற்றும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

இதையொட்டி, சென்னையில் நேற்று மருந்து கடைகள் தவிர மற்றஅனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. திருமழிசை காய்கறி சந்தை, மாதவரம் பழச்சந்தை, காசிமேடு மீன்சந்தைக்கும் விடுமுறை விடப்பட்டிருந்தது. மாநகரில்பல்வேறு பகுதிகளில் போலீஸார் சோதனைச் சாவடிகள் அமைத்து, விதிகளை மீறி வாகனங்களில் சென்றவர்களை தடுத்து திருப்பி அனுப்பினர்.

கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை உள்ளிட்ட நகரங்களிலும் காய்கறி, மளிகை, இறைச்சி உள்ளிட்ட அனைத்துகடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. போலீஸாரின் கண்காணிப்பு காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கினர். இதனால் மாநிலத்தின் முக்கிய சாலைகள் அனைத்தும் வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

அனைத்து நகரங்களிலும் அம்மா உணவகங்கள் வழக்கம்போல செயல்பட்டன. வீடற்றோர்,ஓட்டல்களை நம்பியுள்ள தொழிலாளர்களுக்கு இது பேருதவியாக இருந்தது. பல பகுதிகளிலும் ஆதரவற்றோர், சாலையோரம் வசிப்போருக்கு போலீஸார், பல்வேறு தொண்டு நிறுவனத்தினர், தன்னார்வலர்கள் உணவு அளித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in