Last Updated : 16 Aug, 2020 07:06 PM

 

Published : 16 Aug 2020 07:06 PM
Last Updated : 16 Aug 2020 07:06 PM

புதுக்கோட்டையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற பெண் மனநோயாளி மருத்துவமனையில் சேர்ப்பு; கரோனா சமயத்திலும் ஆதரவற்ற மனநோயாளிகள் மீட்பு பணி தீவிரம்

புதுக்கோட்டையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற பெண் மனநோயாளிக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக திறக்கப்பட்ட கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை முத்துலெட்சுமி ரெட்டி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரத் துறையின் கீழ் 50 படுக்கைகளைக் கொண்ட மனநோய் அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையம் செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மட்டுமே செயல்படக்கூடிய இம்மையத்தில், புதுக்கோட்டை 'துணைவன்' எனும் சமூக சேவை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் புதுகை செல்வா அளித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் ஆதரவின்றி தவித்த 2 ஆண் மற்றும் 1 பெண் என மொத்தம் 3 மனநோயாளிகளை நேற்று (ஆக.15) மீட்டு புதுக்கோட்டை நகர காவல்துறையினர் சேர்த்தனர்.

இரு தினங்களுக்கு முன்பு சேர்க்கப்பட்ட பெண்ணுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் திறக்கப்பட்ட கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் உள்ள பிரத்யேக வார்டில் சேர்க்கப்பட்டுள்ளார். கரோனா சமயத்திலும் ஆதரவற்ற மனநோயாளிகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டி வருவது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

கார்த்திக் தெய்வநாயகம்

இது குறித்து மாவட்ட மனநல திட்ட அலுவலர் ரெ.கார்த்திக் தெய்வநாயகம் கூறுகையில், "மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உத்தரவின் பேரில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, தங்க வைத்து, அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சையில் குணமடைந்த பிறகு குடும்பத்தினரோடு சேர்த்து வைப்பது அல்லது அவர்களுக்கு சிறுதொழில் கற்றுக்கொடுத்து சுயசார்பு மனிதர்களாக மாற்றுவதற்காக இம்மையம் செயப்பட்டு வருகிறது.

தற்போது 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்று காலத்திலும் அனைத்துத் துறையினர் மற்றும் பொதுமக்களின் ஆதரவோடு ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டோர் மீட்கப்பட்டு வருகின்றனர். இதுபோன்ற ஆதரவற்ற மனநோயாளிகள் சுற்றித்திரிந்தால் 9486067686 என்ற எண்ணுக்குத் தெரிவிக்கலாம். வாகன வசதி ஏற்படுத்தி மீட்டுவரப்படுவார்கள்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x