Published : 16 Aug 2020 07:22 AM
Last Updated : 16 Aug 2020 07:22 AM

சிறைக்குள் உண்ணாவிரதம் இருந்த கைதியை சேலம் சிறைக்கு மாற்றியதை எதிர்த்து வழக்கு: ஒரு வாரத்தில் புழலுக்கு மாற்ற நீதிபதிகள் உத்தரவு

சிறைக்குள் உண்ணாவிரதம் இருந்ததாகக்கூறி சென்னையில் இருந்து சேலம் சிறைக்கு மாற்றப்பட்ட கைதியை ஒரு வாரத்தில் புழல் சிறைக்கு மாற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்தவர் சீனிவாசன்(44). இவர் ஒரு வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக கடந்த 2011-ல் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சீனிவாசன் கடந்த 2015-ம் ஆண்டு சக கைதிகளுடன் சண்டை போட்டதாகக்கூறி இவரை சந்திக்க உறவினர்களுக்கு ஒரு மாதம் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர் சிறைக்குள் உண்ணாவிரதம் இருந்துள்ளார். இதையடுத்து அவரை புழல் சிறையில் இருந்து சேலம் சிறைக்கு மாற்றி சிறைத்துறை நிர்வாகம் கடந்த 2018-ல் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து சீனிவாசன் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “சிறைத்துறை அதிகாரிகள் என்னை பழிவாங்கும் நோக்கில் சேலம் சிறைக்கு மாற்றியுள்ளனர். சென்னையில் உள்ள எனது மனைவி மற்றும் குழந்தைகள் என்னை சந்திக்க 350 கிமீ தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. எனவே என்னை மீண்டும் புழல் சிறைக்கு மாற்ற வேண்டும். அத்துடன் நான் விசாரணை காலத்தில் சிறையில் இருந்த நாட்களை தண்டனையில் கழிக்க சிறைத்துறைக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் முகமது சயிபுல்லாவும், அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் எம்.பிரபாவதியும் ஆஜராகி வாதிட்டனர்.

அதையடுத்து நீதிபதிகள், “உண்ணாவிரதம் இருந்தார் என்பதற்காக சீனிவாசனை சேலம் சிறைக்கு மாற்றியது சரியான நடைமுறை அல்ல. எனவே அவரை ஒரு வாரத்துக்குள் சென்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும். அதேபோல் அவர் விசாரணை காலகட்டத்தில் சிறையில் இருந்த நாட்களை தண்டனையில் கழிக்க வேண்டும். நீதிமன்றத்தை நாடியுள்ளார் என்ற காரணத்துக்காக அவரை மோசமாக நடத்தக்கூடாது. அப்படி ஏதாவது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட சிறைத்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x