ஆலங்குடியில் முகக்கவசம் அணியாமல் செல்வோருக்கு கரோனா பரிசோதனை

ஆலங்குடியில் முகக்கவசம் அணியாமல் சாலையில் சென்றவர்களை நிறுத்தி கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தும் மருத்துவக் குழுவினர்.
ஆலங்குடியில் முகக்கவசம் அணியாமல் சாலையில் சென்றவர்களை நிறுத்தி கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தும் மருத்துவக் குழுவினர்.
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் வரை 174 பேர் மட்டுமே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதன்பிறகு நேற்று வரையிலான கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் 3,662 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 47 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, ஆலங்குடியில் முகக்கவசம் அணியாமல் சாலையில் செல்வோரை போக்குவரத்து போலீஸார் உதவியுடன் தடுத்து நிறுத்தி, அருகிலேயே கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

இதனால், முகக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதுடன், கரோனா பரிசோதனையும் எளிதாக மேற்கொள்ள முடிகிறது என சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து திருவரங்குளம் வட்டார மருத்துவ அலுவலர் எஸ்.அருள் கூறியதாவது: கரோனா தொற்றைத் தடுப்பதற்காக முகக்கவசம் அணியாமல் சாலையில் செல்வோரை போக்குவரத்து போலீஸாரின் உதவியுடன் நிறுத்தி,அவர்களுக்கு அரசுப் பள்ளி மாணவிகள் விடுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள கரோனா பரிசோதனை மையத்தில் பரிசோதனை செய்யப்படுகிறது. இவ்வாறு கடந்த 2 நாட்களில் 114 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இவ்வாறு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதனால், முகக்கவசம் அணியாமல் சாலையில் செல்வோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in