Published : 15 Aug 2020 07:11 AM
Last Updated : 15 Aug 2020 07:11 AM

தொடர்ச்சியான ஊரடங்கு உத்தரவு காரணமாக மாமல்லபுரம் கற்சிற்ப கலைஞர்கள் வேலை இழப்பு

கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக அமலில்இருக்கும் ஊரடங்கு உத்தரவால் மாமல்லபுரத்தில் நூற்றுக்கணக்கான கற்சிற்பக் கலைஞர்கள் வேலைவாய்ப்பை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பல்லவ மன்னர்களின் சிற்பக்கலையை பறைசாற்றும் கடற்கரைக் கோயில், ஐந்துரதம், அர்ஜுனன்தபசு உள்ளிட்ட சிற்பங்கள் அமைந்துள்ளதால் உலகின்சிறந்த கைவினை நகரமாகமாமல்லபுரம் விளங்குகிறது.

இப்பகுதியில் நூற்றுக்கும்மேற்பட்ட சிற்ப கலைக்கூடங்களில் நேர்த்தியான முறையில் வடிவமைக்கப்படும் கற்சிற்பங்களை, இங்கு சுற்றுலா வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் விரும்புகின்றனர்.

அதுமட்டுமின்றி மாமல்லபுரத்தில் தயாராகும் கற்சிற்பங்களுக்குசர்வதேச அளவில் வரவேற்பு உள்ளதால், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சிற்பங்கள்வடிவமைக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம்முதல் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் நாடு முழுதும் ஏற்றுமதி சேவைகள் முடங்கியுள்ளன. இதனால்மாமல்லபுரம் சிற்ப கலைக்கூடங்களில் தயாரான கற்சிலைகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியாத நிலை உள்ளது.

மேலும், விமான சேவை இல்லாததால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையும் இல்லை. இதன் காரணமாக புதிய சிற்பங்களுக்கான ஆர்டர்களைப் பெறமுடியாமல் சிற்பக் கலைஞர்கள் வேலைவாய்ப்பை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாமல்லபுரம் சிற்பக் கலைஞர் பாஸ்கரன் கூறியதாவது: சுற்றுலாப் பயணிகள் வராததால் புதிய சிற்பங்களுக்கு ஆர்டர் கிடைக்கவில்லை. ஏற்கெனவே வாங்கிய ஆர்டரின்பேரில் தயாரிக்கப்பட்ட சிற்பங்களையும் அனுப்பமுடியாததால் எங்களுக்கு பொருளாதார இழப்பும் ஏற்பட்டுள்ளது.

மாமல்லபுரத்தில் என்னைப் போன்ற நூற்றுக்கணக்கான சிற்பக் கலைஞர்கள் வேலைவாய்ப்பை இழந்து தவிக்கிறோம். இந்நிலையில் கரோனா அச்சமும் ஊரடங்கு நிலையும் தொடர்வதால் சிற்பக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை காப்பற்ற அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x