

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ராஜ்பவனில் தனிமையில் இருந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பூரண குணமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை கிண்டி சர்தார் படேல் சாலையில் ஆளுநர் வசிக்கும் ராஜ்பவன் மாளிகை உள்ளது. பல நூறு ஏக்கர் கொண்ட இந்த அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் நேரடியாகவும், வெளிப்புறத்திலும் பணியாற்றுகின்றனர்.
ஆளுநர் மாளிகை ஊழியர்கள் 147 பேருக்குச் கடந்த மாதம் கரோனா தொற்றுப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 84 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர்கள் பொது சுகாதாரத்துறை மூலம் தனிமைப்படுத்தப்பட்டனர்.
ஜூலை இறுதியில் ஆளுநர் மாளிகையில் 38 ஊழியர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 3 பேருக்குக் கரோனா தொற்று உறுதியானது. ஆளுநர் பூரண உடல் நலத்துடன் உள்ள நிலையில், மருத்துவர் ஆலோசனையின்படி 7 நாட்கள் அவர் தனிமைப்படுத்திக் கொண்டார்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்டு 2 அன்று ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வந்தார். அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவர் மாலை 5 மணி அளவில் ராஜ்பவனுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
இந்நிலையில் ஆளுநருக்குக் கரோனா சோதனை நடத்தப்பட்டதில் அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது, ஆனால், அறிகுறி எதுவும் தெரியவில்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.
லேசான அறிகுறி உள்ளதால் அவரை ராஜ்பவனில் தனிமைப்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. காவேரி மருத்துவமனையின் மருத்துவர் குழு அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணிக்கும் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ராஜ்பவனில் தனிமைப்படுத்துதலில் இருந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கரோனா தொற்றிலிருந்து பூரணமாக குணம் பெற்றதாக காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது.
“ஆளுநருக்கு இன்று நடத்திய கரோனா தொற்று பரிசோதனை நெகட்டிவ் அவருக்கு தொற்று இல்லை என்பதை தெரிவித்துக்கொள்வதிதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
அவரது மன உறுதி, விடாமுயற்சி கரோனா தொற்றிலிருந்து அவர் விரைவாக மீண்டு நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார். அவர் நல்ல உடல் நலத்துடன் இருக்க விழைகிறோம்”.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.