Published : 14 Aug 2020 05:11 PM
Last Updated : 14 Aug 2020 05:11 PM

வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து வருவோர்; இ-பாஸ் பழைய நடைமுறையே தொடர்கிறது: அரசு அறிவிப்பு

வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வர தற்போதுள்ள இ-பாஸ் நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது.

நோய்த் தொற்று பரவுவதை தடுக்க, திருமணம், அவசர மருத்துவம், நெருங்கிய உறவினர் மரணம், பணி சம்பந்தமாக பயணித்தல், வெளியிடங்களுக்குச் சென்று சொந்த ஊர் திரும்புதல் ஆகிய காரணங்களுக்காக மட்டும் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க விண்ணப்பிக்கப்படும் இ-பாஸ் விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் கண்காணிக்கப்பட்டு, நோய்த் தொற்று ஏற்பட்டால் அவர்களுடன் தொடர்புடையவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதில் பல நடைமுறைச் சிக்கல்கள் இருந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரப்படும் நிலை உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. பல மாவட்டங்களில் புரோக்கர்கள் மூலம் பல ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு இ-பாஸ் விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து இ-பாஸ் வழங்குவதில் உள்ள சிக்கலை கலைந்து அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், பொதுமக்கள் முக்கிய பணிகளுக்கு தடையின்றி தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கிடையே பயணிக்க இ-பாஸை விண்ணப்பித்த அனைவருக்கும் எளிதாக வழங்க முதல்வர் உத்தரவிட்டார்.

இந்நிலையில் வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் வழங்குதல் பழைய நடைமுறையிலேயே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த தமிழக அரசின் செய்திக்குறிப்பு:

“பொதுமக்கள் முக்கிய பணிகளுக்கு தடையின்றி தமிழ்நாடு முழுவதும் பயணிக்க (மாவட்டங்களுக்கு இடையே) ஆகஸ்டு 17 முதல் ஆதார் அல்லது குடும்ப அட்டை விவரங்களுடன் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் விண்ணப்பித்தால், இ-பாஸ் அனுமதி எவ்வித தாமதமும் தடையுமின்றி உடனுக்குடன், விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்க இன்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

எனினும், வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வர தற்போதுள்ள இ-பாஸ் நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும்”.

என அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x