Last Updated : 23 Sep, 2015 01:03 PM

 

Published : 23 Sep 2015 01:03 PM
Last Updated : 23 Sep 2015 01:03 PM

அரசு மருத்துவமனைகளில் திருடப்பட்ட 13 குழந்தைகளின் பெற்றோருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு: உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் அரசு மருத்துவமனை களில் திருடப்பட்டு கண்டுபிடிக்க முடியாத 13 குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம், பொம்மனம் பட்டியை சேர்ந்தவர் மீனாட்சி. இவருக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவனையில் 15.6.2013-ல் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை பெண் ஒருவர் திருடிச் சென்றார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், குழந்தையைக் கண்டுபிடிக்கக் கோரி, உயர் நீதிமன்ற கிளையில் மீனாட்சி ஆள்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனு விசாரணைக்கு வரும்போது குழந்தையைக் கண்டுபிடிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு நீதிமன்றம் பலமுறை கெடு விதித்தது. 2 ஆண்டுகளாகியும் குழந்தை கண்டுபிடிக்கப்படவில்லை.

உள்துறை செயலர் தாக்கல் செய்த பதில் மனுவில், தமிழகம் முழுவதும் அரசு மருத்து வமனைகளில் 2006 முதல் 42 குழந்தைகள் திருடப்பட்டுள்ளன. இதில் 29 வழக்குகளில் குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 9 வழக்குகளில் குழந்தைகளை கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த வழக்குகள் முடிக்கப்பட்டன. மனுதாரர் வழக்கு உட்பட 4 வழக்குகளின் விசாரணை நிலுவையில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கண்டுபிடிக்க முடியாத குழந்தைகளின் பெற்றோருக்கு பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டு நிதியில் இருந்து இழப்பீடு வழங்கலாம் என நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர்.

அரசு சார்பில் பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டு நிதியில் இருந்து உயிரிழப்புக்கு ரூ.3 லட்சம், கடத்தல், உறுப்புகள் சேதத்துக்கு ரூ.1 லட்சம் வரை இழப்பீடு வழங்கலாம் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.எஸ்.ரவி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞர் சண்முகவேலாயுதம் வாதிடும்போது, வழக்கறிஞர் ஆணையர்களின் பரிந்துரைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கும். இழப்பீடு வழங்குவது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு நிறைவேற்றப்படும் என்றார். மனுதாரர் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி , பாதிக்கப்பட்டோர் அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.

பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அரசு மருத்துவ மனைகளில் திருடப்பட்டு 7 ஆண்டு களுக்கும் மேலாக கண்டுபிடிக்க முடியாத 6 குழந்தைகளின் பெற்றோருக்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மனுதாரரின் குழந்தை உட்பட 7 குழந்தைகளின் பெற்றோருக்கு தலா ரூ.1 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டோர் இழப்பீடு நிதியில் இருந்து, இந்தப் பணத்தை 30.10.2015-க்குள் டிஜிபி வழங்க வேண்டும் என்றனர்.

யார் யாருக்கு இழப்பீடு

மதுரை கருப்பாயூரணி முத்துமாணிக்கம் மனைவி மாரீஸ்வரி, பனையூர் ரமேஷ் மனைவி முத்துசெலட்சுமி, ராஜபாளையம் அம்மையப்பபுரம் பாண்டிராஜ் மனைவி கோமதி, கோவை குனியமுத்தூர் பரக்கத்துல்லா மனைவி யாஸ்மின், சேலம் அம்மாபேட்டை ஜாபர் மகன் ஆர்.முஸ்தபா, பெரம்பலூர் திருமாந்துறை பிரகாசவேலு மகன் பரமசிவம் ஆகியோருக்கு தலா ரூ.3 லட்சம்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் காமன்பேட்டை பொன்னையா மகன் ராஜேந்திரன், கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பிரகாசன் மனைவி கிருஷ்ணவேனி, கடலூர் குள்ளஞ்சாவடி தான்குழிகுப்பம் விஜயகுமார் மனைவி அமுதா, காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர் ஜான்பானு மகன் உனிக்பாஷா, சிவகங்கை கீழக்கண்டனி பால்ராஜ் மகள் ராதிகா, திருச்சி முசிறி பாலப்பட்டி செல்வம் மனைவி தெய்வானை, மதுரை பொம்மனம்பட்டி தினகரன் மனைவி மீனாட்சி ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x