Published : 14 Aug 2020 08:26 AM
Last Updated : 14 Aug 2020 08:26 AM
சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து தேமுதிக மாவட்ட நிர்வாகிகளுடன் பொருளாளர் பிரேமலதா காணொலி மூலம் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
சட்டப்பேரவை பொதுத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக, திமுக தலைமையில் கூட்டணி கட்சிகள் தயாராகி வருகின்றன.
இதற்கிடையே, வரும் தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கலாம் என்று கருத்து கேட்கும் விதமாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா மற்றும் தலைமை நிர்வாகிகள் மாவட்டம்தோறும் காணொலி மூலம் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளிடம் பேசி, இவ்வாறு கருத்துகளை கேட்டு வருகின்றனர்.
இதுகுறித்து தேமுதிக மூத்த நிர்வாகிகள் கூறும்போது, ‘‘தேர்தலுக்கு தயாராவது குறித்து தேமுதிக பொருளாளர் பிரமேலதா விஜயகாந்த் எடுத்துரைத்துள்ளார். அதிமுக உடனான தற்போதைய கூட்டணி குறித்து நிர்வாகிகள் மத்தியில் கலவையான கருத்து உள்ளது. தேர்தல் நெருங்கும்போது கூட்டணியை கட்சி தலைமை முடிவு செய்து அறிவிக்கும். கூட்டணி எப்படி இருந்தாலும் தேமுதிக தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும். செல்வாக்கைப் பெற தொண்டர்கள், மாவட்டம்தோறும் மக்கள் பணி ஆற்றவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT