

சிவகங்கையில் சில பள்ளிகளில் சத்துணவுப் பொருட்களை வெளிச்சந்தையில் விற்பனை செய்வதாக மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தனிடம் பெற்றோர் புகார் தெரிவித்தனர்.
அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டு வந்தது. கரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
மாணவர்களின் பெற்றோரில் பலரும் வேலைவாய்ப்பின்றி வீட்டிலேயே முடங்கினர். இதனால் மாணவர்கள் பலருக்கும் போதிய உணவு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து மாணவர்களுக்கு மே மாதத்திற்குரியய சத்துணவு அரிசி, பருப்பை வழங்க வேண்டும். அதில் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தலா 3.100 கிலோ அரிசி, 1.200 கிலோ பருப்பு, ஆறு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தலா 4.650 கிலோ அரிசி, 1.250 கிலோ பருப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட மாணவர்களை வரவழைத்து சமூக இடைவெளியுடன் அரிசி, பருப்பு வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு முறையாக வழங்குவதில்லை. இந்நிலையில் சிவகங்கை பகுதியைச் சேர்ந்த ஒரு பள்ளியில் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய சத்துணவுப் பொருட்களை வெளிச்சந்தையில் விற்பனை செய்யவதாக, பெற்றோர் மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தனிடம் புகார் கொடுத்தனர்.
இதுகுறித்து ஆட்சியரின் உத்தரவின்பேரில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) வீரராகவன் விசாரணை நடத்தினார்.