

அதிமுக அமைச்சர்களால் முதல்வர் வேட்பாளரைத் தீர்மானிக்க முடியாது. அதிமுகவின் எந்த முடிவாக இருந்தாலும் மோடிதான் தீர்மானிப்பார் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
சேலத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இன்று (ஆக.13) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் கரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதற்கு மத்திய பாஜக அரசே முழு காரணம். கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவில் கரோனா தொற்று பரவியதை உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தபோதே, விமானப் போக்குவரத்தை இந்திய அரசு தடை செய்திருந்தால், இத்தகைய பாதிப்பு ஏற்பட்டு இருக்காது.
இந்தக் கரோனா காலத்தைப் பயன்படுத்தி மத்திய அரசு பாஜக, ஆர்எஸ்எஸ் மனு தர்மக் கொள்கைகளை நிறைவேற்றி வருகிறது. மின்சாரத் திருத்தச் சட்டம் உள்பட பல்வேறு சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்து விவசாயிகளைப் பாதிப்படையச் செய்திருக்கிறது.
தமிழக முதல்வர் மின்சாரத் திருத்தச் சட்டத்தில் விதிவிலக்கைத்தான் கேட்கிறாரே தவிர, திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தவில்லை. புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்டி, முதல்வர் சிறப்புத் தீர்மானம் கொண்டுவர வேண்டும்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது, நீட், உதய் மின் திட்டம் போன்றவற்றை எதிர்த்தார். ஆனால், முதல்வர் பழனிசாமி, தமிழக உரிமைகளை விட்டுக்கொடுத்து வருகிறார். பாஜக எனும் பாம்பு வாயில் அகப்பட்ட தவளையாக அதிமுக உள்ளது. தலை மட்டும்தான் லேசாக வெளியே தெரிகிறது. அதனால், இனி பாம்பின் வாயில் இருந்து மீள முடியாது.
திமுக தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற கூட்டணி கொள்கை ரீதியானது. எங்களின் முதல்வர் வேட்பாளர் திமுக தலைவர் ஸ்டாலின் என்பதை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்துவிட்டோம். தமிழக உரிமைக்காவும், மக்களின் பிரச்சினைக்காகவும் ஒன்றிணைந்து போராடி வருகிறோம். எங்களது கூட்டணி பலம் வாய்ந்ததாக உள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்றோம். வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்.
திமுகவுக்கு பாஜக போட்டி என்பது பகல் கனவு. பாஜகவுடன் உள்ள கட்சிகளை மக்கள் நிராகரிப்பர். அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ராஜேந்திரபாலாஜி ஆகியோர் அதிமுகவின் முதல்வர் வேட்பாளரைத் தீர்மானிக்க முடியாது. அதிமுகவின் எந்த முடிவாக இருந்தாலும் அதைப் பிரதமர் மோடிதான் தீர்மானிப்பார்.
வரும் 15-ம் தேதி முதல்வர் பழனிசாமி கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றுவார். அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி அவர் கோட்டையில் கொடி ஏற்ற மாட்டார். மக்கள் கடும் பாதிப்பால் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும்".
இவ்வாறு முத்தரசன் கூறினார்.