சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கை தமிழ் மொழிப் பெயர்ப்பு தயார்: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கை தமிழ் மொழிப் பெயர்ப்பு தயார்: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
Updated on
1 min read

சுற்றுசூழல் தாக்க வரைவு அறிக்கை 2020 குறித்த பொதுமக்கள் கருத்துக்கேட்பு குறித்த வழக்கில் பிராந்திய மொழிகளில் மொழிப்பெயர்க்கப்படவில்லை என உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டு தயாராக உள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுசூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டு அது தொடர்பான கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் மீனவர் நல சங்கம் அமைப்பின் தலைவர் தியாகராஜன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், “ சுற்றுசூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கையை கடந்த மார்ச் மாதம் 23 ம் தேதி வெளியிட்ட மத்திய அரசு, ஏப்.11/2020-ல் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வரைவு அறிக்கையை அரசிதழில் வெளியிட்டுள்ளது. அது தொடர்பான கருத்துகள் மற்றும் ஆட்சேபனையை தெரிவிக்க தற்போது அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

பிராந்திய மொழிகளில் அதன் மொழிபெயர்ப்பை வெளியிடாமல், வரைவு குறித்த கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிக்க கோருவது ஏற்புடையது அல்ல என்பதால், வரைவு அறிக்கை மீதான மேல் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும், அனைத்து மாநில மொழிகளிலும் வரைவு அறிக்கையை வெளியிட உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.

இந்த மனு கடந்த முறை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது, அப்போது “ வரைவு அறிக்கையை தமிழில் வெளியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா? உள்ளாட்சி அமைப்புகளின் இணையதளங்களில் வெளியிட முடியுமா? என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டும்” என மத்திய அரசுக்கு அமர்வு உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கில் தமிழக தலைமைச் செயலாளரையும் எதிர்மனுதாரராக தாமாக முன்வந்து சேர்த்தனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது மத்திய அரசுத் தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், “ சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு தயாராக உள்ளது. இதுசம்பந்தமாக எழுத்துப்பூர்வமான விளக்கத்தை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும். இந்த வரைவு அறிக்கை தொடர்பாக பல்வேறு உயர் நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது”. என விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், எழுத்துப்பூர்வமான விளக்கத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர், மேலும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு என வாட்ஸ் ஆப்-பில் செய்தி பரவுகிறதே, அது அதிகாரப்பூர்வமானதா எனவும் விளக்கமளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஆகஸ்ட் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in