Published : 13 Aug 2020 01:43 PM
Last Updated : 13 Aug 2020 01:43 PM

தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி என்று அறிவிக்க விபி.துரைசாமிக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளதா?- கே.பி.முனுசாமி கேள்வி

தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி என்று தேசியத் தலைவர் நட்டா அறிவித்தாரா? அல்லது முருகன் அறிவித்தாரா? அறிவிக்க வி.பி.துரைசாமி யார்? அவருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளதா? என கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் ஒரு கூட்டணியாகவும் போட்டியிட்டன. அப்போதே பாஜக தலைமையில் கூட்டணி என்கிற பிரச்சினை எழுந்து பின்னர் அதிமுக தலைமையில்தான் கூட்டணி என அறிவிக்கப்பட்டது.

சமீபத்தில் பாஜகவில் இணைந்த வி.பி.துரைசாமி தற்போது பாஜக துணைத் தலைவராக உள்ளார். அவர் நேற்று அளித்த பேட்டியில், “இனி தமிழகத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி. இனி திமுக - பாஜகவுக்குத்தான் போட்டியே என்று கூறியிருந்தார். நாங்கள் வலுவடைந்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.

இது அரசியல் களத்தில் சர்ச்சையை எழுப்பியது. இதுகுறித்து பாஜக தலைமை மறுப்பு தெரிவிக்காத நிலையில் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் முடிந்தவுடன் அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பாஜக தலைமையில் கூட்டணி குறித்த கேள்விக்கும், அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்த கேள்விக்கும் பதிலளித்தார்.

இது தொடர்பாக கே.பி.முனுசாமி அளித்த பேட்டி:

''தேர்தல் பணியைப் பற்றி ஆலோசிக்க இன்றைய கூட்டம் கூட்டப்பட்டது. முதல்வர் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். அவருக்குத் துணையாக துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளார். அமைச்சர்கள் செயல்படுகின்றனர். இன்று கரோனா பேரிடர் சூழ்ந்த இக்கட்டான நிலையில் தமிழகம் முன் மாதிரி மாநிலமாகச் செயல்படுகிறது. முதல்வர் தலைமையில் இந்தியாவிற்கே முன் மாதிரியாக தொற்றுத் தடுப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. அது ஆட்சிப்பணி. கட்சிப் பணி குறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம்.

முதல்வர் வேட்பாளர் யார் என நீங்கள் கேட்ட கேள்விக்கு உரிய காலத்தில் உரிய முடிவை உரிய முறையில் எடுப்போம். அதைக் கட்சி தலைமை நிர்வாகிகள் அறிவிப்பார்கள்.

பாஜக தலைமையில்தான் கூட்டணி என்று அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் முருகன் சொன்னாரா? தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா சொன்னாரா? நேற்றுவரை ஒரு கட்சியில் இருந்தவர் (வி.பி.துரைசாமி), அதற்கு முன் இன்னொரு கட்சியில் இருந்தவர் ஏதோ ஒரு ஆதாயம் கிடைக்கும் என்பதற்காக பாஜகவுக்குச் சென்றுள்ளார். அவர் சொல்வதெல்லாம் கருத்தா?

அப்படி கருத்துச் சொல்ல அவருக்கு அந்தக் கட்சி அதிகாரம் கொடுத்துள்ளதா? நேற்று முன் தினம் பேட்டி அளித்த பாஜக மாநிலத் தலைவர் முருகன், அதிமுகவுடன் கூட்டணி அமைந்துள்ளது என்கிறார். பிறகு அந்தக் கேள்விக்கே இடமில்லை. அந்தக் கூட்டணி யார் தலைமையில் அமைந்தது. அதிமுக தலைமையில் தானே. அப்படிப்பட்ட கூட்டணிக்கு முருகனே ஒப்புதல் கொடுத்துள்ளார்.

பாஜக, அதிமுக கூட்டணியில் இருக்கிறதா என்கிற கேள்வியே முறையற்ற ஒன்று. அதிமுக கூட்டணியில்தான் பாஜக உள்ளது என அதன் மாநிலத் தலைவர் முருகன் கூறியிருப்பதை உங்களுக்குப் பதிலாகச் சொல்கிறேன்''.

இவ்வாறு கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x