Last Updated : 13 Aug, 2020 12:20 PM

 

Published : 13 Aug 2020 12:20 PM
Last Updated : 13 Aug 2020 12:20 PM

எல்லை தாண்டி மீன்பிடிக்கச் சென்றால் கடும் நடவடிக்கை: நாகை ஆட்சியர் எச்சரிக்கை

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் இந்தியக் கடல் எல்லையைக் கடந்து சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபடக்கூடாது என மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி. நாயர் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:

''தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இந்தியக் கடல் எல்லையைக் கடந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபடும்போது இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்படுவதும், தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டிற்கு ஆளாவதுமான அசாதாரண சூழ்நிலைகள் அடிக்கடி ஏற்படுகின்றன.

அதுமட்டுமில்லாமல், மீனவர்கள் இந்தியக் கடல் எல்லையைக் கடந்து மீன்பிடிக்கச் செல்வதால் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களை இனம் காண்பது மிகவும் கடினமாக உள்ளது. இதைப் பயன்படுத்தி சட்ட விரோதச் செயல்களை மேற்கொள்பவர்கள் சுலபமாகத் தப்பித்துக்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் மத்திய - மாநில அரசுகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியக் கடல் எல்லையைக் கடந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபடும்போது இந்திய - இலங்கைக் கடல் எல்லையில் அசாதாரணச் சூழ்நிலை ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, நாகப்பட்டினம் மீனவர்கள் இந்தியக் கடல் எல்லையைக் கடந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபடக்கூடாது என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இதையும் மீறி எல்லை தாண்டி மீன்பிடிக்கச் செல்லும் நாகப்பட்டினம் மாவட்ட மீன்பிடிப்படகு உரிமையாளர்கள் மீது அபராதங்கள் விதிக்கப்படுவதுடன் படகுகள் தொழில் முடக்கம் செய்யப்பட்டு தமிழ்நாடு கடல் மீன்பிடி ஓழுங்குமுறைச் சட்டத்தின் வாயிலாகக் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்''.

இவ்வாறு நாகை ஆட்சியர் பிரவீன் பி. நாயர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x