Last Updated : 13 Aug, 2020 08:35 AM

 

Published : 13 Aug 2020 08:35 AM
Last Updated : 13 Aug 2020 08:35 AM

ஊரடங்கால் 4 மாதங்களாக வெறிச்சோடிய கன்னியாகுமரி: சூரிய உதயத்தைக் காண 8,000 பேர் அமரும் வகையில் காட்சிக்கூடம்

கன்னியாகுமரியில் கடந்த 4 மாதங்களாக சுற்றுலாப் பயணிகள் யாரும் வராத நிலையில், ஊரடங்கை பயன்படுத்தி சூரிய உதயத்தை காண வசதியாக கடற்கரையில், 8,000 பேர் அமரும் வகையில் காட்சிக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

கரோனா ஊரடங்கு கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஒட்டுமொத்த மக்களின் வாழ்க்கை முறையை மாற்றியுள்ளது. தமிழகத்தில் உள்ள சுற்றுலா மையங்கள் அத்தனையும் களையிழந்துள்ளன. இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரியின் இயற்கை பேரழகைக் காண யாரும் வராமல், நகரம் வெறிச்சோடிக் கிடக்கிறது.

இங்கு சுற்றுலாவை நம்பிவருவாய் ஈட்டி வந்த, சிறு பெட்டிக்கடைகள், தள்ளுவண்டிக்கடைகள் முதல் பெரிய கடைகள், ஓட்டல்கள், விடுதிகள் வரை நடத்துபவர்கள், சுற்றுலா வழிகாட்டுநர்கள், புகைப்படக்காரர்கள், சுற்றுலா வாகனஓட்டுநர்கள் என அனத்துத்துறையினரும் பேரிழப்பை சந்தித்துள்ளனர். சுற்றுலாவை நம்பிய ஆயிரக்கணக்கானோர் வேலையிழந்து தவிக்கின்றனர்.

கன்னியாகுமரி நகரம் 1910-ம்ஆண்டில் இருந்து சுற்றுலா தலமாகஅறியப்பட்டது. அதற்கு முன் வரை,முக்கடல் சங்கமத்தில் புனிதநீராடுவதற்கும், மூதாதையர்களுக்குரிய கடமைகளை செய்வதற்கும் உரிய ஆன்மிகத் தலமாக மட்டுமேஇந்நகரம் விளங்கியது. 1910-ம்ஆண்டுக்குப் பிறகே சுற்றுலாவளர்ச்சிக்குரிய திட்டங்கள் படிப்படியாக செயல்படுத்தப்பட்டன. அதன்பின், கடந்த 110 ஆண்டுகளில் தொடர்ந்து 4 மாதங்களுக்கு மேல்சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடியது இந்த ஆண்டுதான். கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலை மட்டும் திறந்துகாலை, மதியம், மாலை என வழக்கமான பாரம்பரிய பூஜைகள், பக்தர்கள் இன்றி நடந்து வருகின்றன.விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு செல்வதற்கான பூம்புகார் கப்பல் போக்குவரத்துகழகத்தின் படகு சேவை முடங்கியுள்ளது. ஊரடங்கு நாட்களில் சுற்றுலாத்துறை மற்றும் தனியாருக்கு பல கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஊரடங்கு நேரத்தை பயன்படுத்தி முக்கடல் சங்கமம் உள்ளிட்ட பகுதிகள் மத்திய அரசின் நிதியுதவியுடன், புதுப்பொலிவு பெற்று வருகின்றன.

முக்கடல் சங்கமம் முதல் சூரிய அஸ்தமன மையம் வரை ரூ.9 கோடி மதிப்பீட்டில் கடற்கரையை சீரமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. கடலில் நீராட வசதியாக முக்கடல் சங்கமத்தில் கைப்பிடிச் சுவருடன் படித்துறை அமைக்கப்படுகிறது. அதன் அருகில் சூரிய உதயத்தை பார்க்கும் வகையில் 9 அடுக்குகள் கொண்ட காட்சிக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 8 ஆயிரம் பேர் இங்கு அமர்ந்து திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்தின் பின்னணியில், சூரிய உதயத்தை காணமுடியும். காமராஜர் மணிமண்டபம், காந்தி மண்டபம் ஆகியவையும் சீரமைக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு முடியும்போது, இவை சுற்றுலா பயணிகளுக்கு பேரானந்தத்தைக் கொடுக்கும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x