Published : 13 Aug 2020 08:09 AM
Last Updated : 13 Aug 2020 08:09 AM

கனிமொழி சொல்வது போல நடந்திருக்க வாய்ப்பு மிகக்குறைவு: தமிழக பாஜக தலைவர் முருகன் தகவல்

பெரம்பலூர்

விமான நிலையத்தில் கனிமொழி சொல்வது போல நடந்திருக்க வாய்ப்பு மிக மிகக்குறைவு என தமிழக பாஜக தலைவர் முருகன் தெரிவித்தார்.

பெரம்பலூரில் நேற்று நடந்த பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த அவர், பிறகு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கந்த சஷ்டி கவசம் குறித்து வீடியோ மூலம் அவதூறு செய்ததால் கைது செய்யப்பட்டவர்களின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்தும் விசாரித்து அவர்கள் மீதும் காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் மோடி மீது நம்பிக்கை வைத்தும், பாஜகவின் செயல்பாட்டால் ஈர்க்கப்பட்டும் பலர் மாநிலம் முழுவதும் பாஜகவில் இணைந்து வருகின்றனர். தமிழகத்தில் பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது என்பதையே இது காட்டுகிறது.

இபிஎஸ்., ஓபிஎஸ் இரட்டைத் தலைமை குறித்து அதிமுகவில் சிலர் சர்ச்சை கிளப்புவது அதிமுக உட்கட்சி விவகாரம். அது குறித்து நான் சொல்வதற்கு எதுவுமில்லை.

நாடறிந்த விஐபியான கனிமொழி வி.ஐ.பி புரோட்டோகால் அடிப்படையில் சிஐஎஸ்எஃப் நபர்களிடம் பேச வேண்டிய அவசியமே இல்லை. விமான நிலையத்தில் அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க வாய்ப்பு மிக மிகக் குறைவு. அரசியல் செய்வதற்காக இந்த விவகாரத்தை கனிமொழி பெரிதுபடுத்தி பேசுவதாக தெரிகிறது.

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி அனைத்து மாநிலங்களிலும் இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆனால், துரதிருஷ்டவசமாக தமிழகத்தில் இன்னும் நடைமுறையில் உள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x