

சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் 15,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை காவல்துறை செய்திக்குறிப்பு:
“வருகிற ஆகஸ்டு 15 அன்று இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர் சென்னை, கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி சுதந்திரதின விழா உரையாற்றுகிறார். இதனையொட்டி சென்னை கோட்டை முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் சென்னை கோட்டை முழுவதும், நவீன சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டு அறையிலிருந்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், உத்தரவின் பேரில், கூடுதல் ஆணையாளர்கள் தினகரன்,(தெற்கு), அருண், (வடக்கு), கண்ணன், (போக்குவரத்து) ஆகியோரின் அறிவுரையின்பேரில், காவல் இணை ஆணையாளர்களின் நேரடி மேற்பார்வையில், துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என மொத்தம் 15,000 காவல் ஆளிநர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும், முக்கிய இடங்களான சென்னை விமானநிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், கேளிக்கை பூங்காக்கள் (Amusement Park), கிண்டி சிறுவர் பூங்கா மற்றும் வழிபாட்டுத் தலங்களில் கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இது தவிர சென்னையிலுள்ள அனைத்து தங்கும் விடுதிகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தவிர சென்னை பெருநகர் முழுவதும் சுற்றுக்காவல் ரோந்து வாகனங்கள் மூலம் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, முக்கிய இடங்களில் Drone Camera மூலம் கண்காணித்தும், நகரின் முக்கியமான இடங்களில் தடுப்புகள் அமைத்து வாகனத்தணிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது”.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.