வனத்துறையினர் தாக்கி உயிரிழந்த தென்காசி விவசாயி மறு பிரேதப் பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் அவகாசம்

வனத்துறையினர் தாக்கி உயிரிழந்த தென்காசி விவசாயி மறு பிரேதப் பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் அவகாசம்
Updated on
1 min read

தென்காசியில் வனத்துறையினர் தாக்கி உயிரிழந்த விவசாயின் மறு பிரேதப் பரிசோதனையை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.

தென்காசி வாகைகுளத்தைச் சேர்ந்த பாலம்மாள், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

எங்கள் தோட்டத்தில் மின் வேலி அமைத்தது தொடர்பாக என் கணவர் என் கணவர் அணைக்கரை முத்துவை வனத்துறையினர் விசாரணைக்காக ஜூலை 22-ம் தேதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து கணவரை வனத்துறையினர் கடுமையாக தாக்கினர். பின்னர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி கணவரை தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் என் கணவரை பரிசோதித்த போது அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

என் கணவரை வனத்துறையினர் கடுமையாக தாக்கியுள்ளனர். கணவர் உடலில் 18 வெளிப்புற காயங்கள் இருந்துள்ளது. இரவில் அவசரம் அவசரமாக பிரேத பரிசோதனை செய்துள்ளனர். எனவே அணைக்கரை முத்துவின் உடலை மறுபிரேத பரிசோதனை நடத்தவும், வனத்துறை அலுவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யவும், வழக்கை விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, அணைக்கரை முத்து உடலை நெல்லை அரசு மருத்துவவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவக்குழு மீண்டும் பிரேத பரிசோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கு நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், மனுதாரர் கணவர் உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்களில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மறு பிரேத பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் தர வேண்டும் என்றார்.

இதையடுத்து, விசாரணை அறிக்கை, மறு பிரேதப் பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி விசாரணையை ஆகஸ்ட் 27-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in