Last Updated : 12 Aug, 2020 07:39 PM

 

Published : 12 Aug 2020 07:39 PM
Last Updated : 12 Aug 2020 07:39 PM

காவிரியில் வெள்ளத்தை ஏற்படுத்தும் ஆகஸ்ட் மாதம்: மேட்டூர் அணை இன்று 100 அடியை எட்டுமா?

சேலம்

கடந்த ஆண்டைப் போலவே, நடப்பாண்டிலும் ஆகஸ்ட் மாதம் கை கொடுத்துள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.27 அடியை எட்டியுள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டைப் போலவே, அணையின் நீர் மட்டம் நாளை (13-ம் தேதி) 100 அடியை எட்டுமா? என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 57.16 அடியாக இருந்தது. அந்த ஆண்டு ஆகஸ்ட்டில், காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில், பருவமழை தீவிரமடைந்தது. எனவே, கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி, அவற்றில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர், வெள்ளமெனப் பெருக்கெடுத்து வந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விறுவிறுவென அதிகரிக்கத் தொடங்கியது.

தொடக்கத்தில் விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர் வரத்து, ஒவ்வொரு மணி நேரமும் அதிகரித்துக் கொண்டே வந்தது. விநாடிக்கு 1 லட்சம் கனஅடி, 1.50 லட்சம் கனஅடி என அதிகரித்து, ஆகஸ்ட் 12-ம் தேதி அதிகபட்சமாக விநாடிக்கு 2.40 லட்சம் கனஅடி நீர் மேட்டூர் அணைக்கு வந்தது. இதன் காரணமாக, நீர்மட்டம் மூன்றே நாட்களில் 42 அடி உயர்ந்து, ஆகஸ்ட் 13-ம் தேதி அதிகாலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது.

கடந்த ஆண்டினைப் போலவே, நடப்பாண்டிலும் மேட்டூர் அணைக்கு ஆகஸ்ட் மாதம் கை கொடுத்துள்ளது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் கடந்த 6-ம் தேதி 64.20 அடியாக இருந்த நிலையில், அணைக்கான நீர் வரத்து விநாடிக்கு 3,625 கனஅடியாக இருந்தது. இந்நிலையில், கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் மேட்டூர் அணைக்கு வந்து சேரத் தொடங்கியது. தொடக்கத்தில் விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர் வரத்து, பின்னர் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது.

அதிகபட்சமாக, விநாடிக்கு 1.30 லட்சம் கனஅடி வரை நீர் வரத்து இருந்தது. எனவே, மேட்டூர் அணையின் நீர் மட்டம் கடந்த 6 நாட்களில் 33 அடி உயர்ந்து. இன்று காலை 97.27 அடியை எட்டியுள்ளது. அணைக்கு விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. டெல்டா பாசனத்துக்கு அணையில் இருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 61.36 டிஎம்சி-யாக இருந்தது.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதியன்று அதிகாலை 4.30 மணியளவில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 100 அடியை (65-வது தடவை) எட்டியது. தற்போதும், 100 அடியை எட்டுவதற்கு மேட்டூர் அணைக்கு 2.73 அடி மட்டுமே எஞ்சியுள்ளது. இந்த சூழலில், காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்வதால், கடந்த ஆண்டினைப் போல, நடப்பாண்டும் ஆகஸ்ட் மாதம் கைகொடுத்துள்ளதால், இந்த ஆண்டும் மேட்டூர் அணையின் நீர் மட்டம் நாளை (13-ம் தேதி) 100 அடியை எட்டிவிடும் என்று விவசாயிகளிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x