Last Updated : 12 Aug, 2020 02:40 PM

 

Published : 12 Aug 2020 02:40 PM
Last Updated : 12 Aug 2020 02:40 PM

தூத்துக்குடியில் கூடுதல் சிசிடிவி கேமிராக்கள் பொருத்த நடவடிக்கை: எஸ்.பி ஜெயக்குமார் தகவல்

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் இன்று திடீரென இந்த அறைக்கு வந்து, கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது காவல் கட்டுப்பாட்டு அறையின் ஆய்வாளர் அன்னபாலா மற்றும் உதவி ஆய்வாளர்கள், காவலர்களுக்கு உரிய அறிவுரைகளை எஸ்பி வழங்கினார்.

பின்னர் அவர் கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு காவல்துறை அவசர உதவி எண் 100 மூலம் இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் தற்போது வரை மொத்தம் 2623 அழைப்புகள் வந்து, அவைகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் 'ஹலோ போலீஸ்' எண் 95141 44100 மூலம் 389 அழைப்புகள், 39 வாட்ஸ்ஆப் தகவல்கள் மற்றும் குறுந்தகவல்கள் வந்துள்ளன.

காவல் கட்டுப்பாட்டு அறையில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இயங்கி வரும் சிசிடிவி கேமிராக்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும் அதிகளவில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தூத்துக்குடி மாநகரில் சாலைகள் அகலப்படுத்தும் பணி மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், அவை முடிந்தவுடன் இன்னும் அதிகளவில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்படும்.

மேலும், சாலை போக்குவரத்தை சீர் செய்வதற்கு முக்கிய சாலை சந்திப்புகளில் சிக்னல் விளக்குகள் அதிகரிக்கப்படும். அடிக்கடி விபத்து நிகழக்கூடிய பகுதிகளில் எச்சரிக்கை விளக்குகள் மற்றும் ஒளிரும் பலகைகள் வைக்கப்படும்.

தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள் காவல்துறையின் அவசர உதவிக்கு எந்த நேரத்திலும் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை அவசர உதவி எண் 100 அல்லது 'ஹலோ போலீஸ்' 95141 44100 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு நேரடி தகவல், குறுந்தகவல் மற்றும் வாட்ஸ்ஆப் தகவல்களை அளிக்கலாம். இந்த காவல் கட்டுப்பாட்டு அறை காவல் ஆய்வாளர் மேற்பார்வையில், உதவி ஆய்வாளர்கள் தலைமையில், காவலர்கள் அடங்கிய குழு 24 மணி நேரமும் பணியில் இருப்பார்கள்.

சட்டவிரோத செயல்கள் நடப்பது பொதுமக்களுக்கு தெரியவந்தால் இந்த எண்களுக்கு தகவல் கொடுக்கலாம். அவ்வாறு தகவல் அளிப்பவர்களின் விபரம் ரகசியமாக வைக்கப்படும். பொதுமக்களின் அழைப்புகளுக்கு காவல்துறை சார்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் எஸ்பி. இந்த ஆய்வின்போது காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் செல்வன் மற்றும் கோபி ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x