Published : 12 Aug 2020 11:50 AM
Last Updated : 12 Aug 2020 11:50 AM

4 மாணவர்களின் உடல்களை விரைவில் தமிழகம் கொண்டு வர நடவடிக்கை: மத்திய அரசுக்கு எல்.முருகன் நன்றி

சென்னை

ரஷ்யாவில் உயிரிழந்த 4 மாணவர்கள் உடலை உடனடியாக தமிழகம் கொண்டுவர செயலில் இறங்கியுள்ள வெளியுறவுத்துறைக்கும், மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கும் பாஜக தலைவர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

“ரஷ்யாவில் இறந்த தமிழ் மாணவர்களின் உடல் இன்னும் 3 அல்லது 4 நாட்களில் இந்தியா கொண்டு வரப்படும். இதற்காக மத்திய வெளியுறவுத்துறை விரைந்து செயலில் இறங்கியுள்ளது.

ரஷ்யாவில் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மரணம் சம்பவித்த தமிழக மாணவர்கள் நான்கு பேரின் உடலை விரைவில் கொண்டு வர மாண்புமிகு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நேற்று (10-08-2020) கடிதம் எழுதி இருந்தேன்.

இன்று ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், உடனடியாக பணியில் இறங்கி, வோல்காகிராட் பல்கலைக்கழகத்திற்கு சென்று அங்கு கல்லூரி நிர்வாகிகளை சந்தித்தனர். இன்று பிரேத பரிசோதனைகள் முடித்து, கரோனா பரிசோதனை செய்த பின், உடல்களுக்கு எம்ஃபார்மிங் செய்து, உடலைக் கொண்டு வர வேண்டிய ரஷ்யாவின் சட்ட திட்டங்கள் முடிக்கப்படும்.

வோல்காவிலிருந்து 1000 கி.மீ கடந்து மாஸ்கோ எடுத்துவரப்பட்டு, அங்கிருந்து இந்தியா கொண்டு வரப்படும். ரஷ்யாவில் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு விமானம் எப்போது கிடைக்கும் என்ற சூழல் நிலவினாலும், தூதரக அதிகாரிகள் எவ்வளவு துரிதமாக முடியுமோ, அவ்வளவு விரைவாக உடலை தமிழகத்தில் மாணவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்க, தங்களால் ஆன அனைத்தையும் செய்வதாகவும், இன்னும் 3 அல்லது 4 நாட்களுக்குள் உடல்கள் இந்தியா வந்தடையும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்திலிருந்து மின்னஞ்சல் மூலமாக தகவல் வந்துள்ளது.

தூதரக அதிகாரிகள் மாணவர்களின் பெற்றோர், உறவினருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். எப்பொழுதுமே தமிழர்கள் நலனில் அக்கறை கொண்ட பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், கரோனா நேரத்திலும், இவ்வளவு விரைவாக விரைந்து, நமது தமிழர்களின் கோரிக்கைக்கு செவி மடுத்து, செயலில் இறங்கி, இடுக்கண் களையும் நண்பனாய் உதவிக் கொண்டிருக்கும் தமிழகத்தைச் சார்ந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கேரளாவைச் சார்ந்த மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் நமது இதய பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்”.

இவ்வாறு முருகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x